
இன்று நாட்டில் அரசியல் சூதாட்டமே இடம் பெற்று வருகிறது
இன்று நாட்டில் அரசியல் சூதாட்டமே இடம் பெற்று வருவதாகவும், இந்த அரசியல் சூதாட்டத்தில் துரதிஷ்டவசமாக 220 இலட்சம் மக்களும் இறையாக்கப்பட்டுள்ளனர் எனவும், இங்கு மக்கள் அபிலாஷைகள் நசுக்கப்பட்டு, ஆட்சியில் இருக்கும் தரப்பு எவ்வாறோ பல்வேறு வழிகளில் மக்கள் அபிப்பிராயங்களை பல்வேறு விதமான உத்திகளைப் பிரயோகித்து நசுக்கி, அவர்களின் நோக்கங்களை சாத்தியப்படுத்திக்கொள்ளும் நிலையே உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (23) நடைபெற்ற அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கம் தனது பதவியை பாதுகாத்துக்கொண்டு தனது இருப்பை தக்கவைப்பதற்காகவே சகலதையும் மேற்கொண்டு வருகின்றதே அன்றி மக்களின் நலனுக்காக அல்ல என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது நாட்டில் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வது முதல் அரசியலமைப்பு திருத்தம் வரை சகல துறைகளிலும் மாற்றம் வேண்டி மக்கள் போராட்டம் இடம் பெற்று வந்தாலும், இறுதியாக அமைதியான முறையில் மக்கள் நடத்திய போராட்டத்திற்கு கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகையிலிருந்து கறுப்பு கறை படிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.