
உலக சாதனை படைத்த அம்பாறை சிறுமி
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் -மினன் வீதி ஸர்ஜுன் அக்மல் பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்தமை பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
உலக சாதனை புத்தக நிறுவனமானது இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவருக்கான இலச்சினை, பதக்கம் மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தனது இரண்டு வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மின்ஹத் லமி மருதமுனை வரலாற்றில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த முதலாவது சாதனை சிறுமியாவார். இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய சிறுமியை பிரதேச மக்கள் பலரும் பாராட்டி வருகின்றார்கள்.