
மனோ கணேசன் பிரதமர் ரணிலுக்கு எழுதிய கடிதம்
உரம் இல்லாததால், நெல் விளைச்சல் இல்லை. உள்நாட்டு நெல் விளைச்சல் இல்லாததால் அரிசி இல்லை. அதேபோல், உரப்பிரச்சினை தேயிலை உற்பத்தியையும் பாதித்துள்ளது. தோட்டங்களில் வேலை இல்லை. ஆகவே வருமானம் இல்லை. உணவுக்காக, அரிசி, கோதுமை வாங்க பணமுமில்லை. கடைகளில் பொருளுமில்லை.
இதனால் ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம். இன்னமும் சில மாதங்களில் பட்டினி சாவு வரலாம். இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
தோட்டங்களில் காணப்படும் பயிரிடப்படாத தரிசு நிலங்களை பிரித்து, தோட்டங்களில் நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன். விவசாய அமைச்சின் அனுசரணையும் இவர்களுக்கு வழங்க சொல்லுங்கள். இந்நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களை தொழிலாளர்கள் பயிரிட்டு தங்கள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு பெற்றுக்கொள்வார்கள். அதேபோல் நாட்டின் உணவு தேவைக்கும் இந்த பயிரிடல் பங்களிப்பை வழங்க முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கோரியுள்ளார்.