
பாகிஸ்தானில் இந்து இளம்பெண் சுட்டுக்கொலை
பாகிஸ்தான் நாட்டில் இந்து, சீக்கியம், கிரிஸ்தவ மதத்தினரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்கள் அரங்கேறி வருகிறது. சிறுபான்மையினராக வாழ்ந்துவரும் அந்த மதத்தினரின் பெண்களை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ரோகி நகரில் இந்து மதத்தை சேர்ந்த பூஜா குமாரி (வயது 18) என்ற இளம்பெண் நேற்று இரவு தனது வீடு அருகே உள்ள தெருவில் நடத்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்திச்செல்ல முயன்றுள்ளது.
பூஜாகுமாரியை கட்டாய திருமணம், மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வாஹித் லஷ்கரி என்ற இளைஞன் தனது நண்பர்களுடன் இணைந்து இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.
இந்த கடத்தல் முயற்சியின் போது பூஜாகுமாரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த வாஹித் மற்றும் அவனது நண்பர்கள் பூஜாகுமாரியை நடுத்தெருவில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பூஜா குமாரி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட பூஜாகுமாரியின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான வாஹித் லஷ்கரி கைது செய்யப்பட்டுள்ளான்.
பூஜா குமாரியை ஏற்கனவே கடத்தி கட்டாய திருமணம் செய்ய வாஹித் முற்சித்ததாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது முறை கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது கடத்தல் முயற்சியின் போது பூஜாகுமாரி எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை வாஹித் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுட்டுக்கொன்றுள்ளான்.