
உக்ரைனில் பள்ளி மீது குண்டு வீசியதில் 21 பொதுமக்கள் பலி
கிழக்கு உக்ரைனில் கார்கிவ் நகருக்கு அருகே மெரேபாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடம், சமுதாய கூடம் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த கட்டிடங்கள் மீது பீரங்கி தாக்குதல் தொடுக்கப்பட்டதில் தரைமட்டமானது. பள்ளி, சமுதாய கூடத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கி இருந்தனர். தாக்குதல் காரணமாக அவர்களது கதி என்ன ஆனது என்பது குறித்து தகவல் தெளிவாக வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் மெரேபாவில் பள்ளி, சமுதாயக்கூடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
கார்கிவ் நகரில் உள்ள ஐரோப்பியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டான பாரபஷோலோ சந்தையில் குண்டுகள் வீசப்பட்டன. அதில் அந்த மார்க்கெட் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
இதே போல் கார்கிவ் நகரின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல் நீடித்து வருகிறது. தலைநகர் கிவ்வில் ரஷிய படைகள் தங்களது தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. கீவ்வில் உள்ள ஸ்வியா டோஷின்ஸ்கி பகுதியில் குண்டுகள் வீச்சில் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
துறைமுக நகரமான மரியுபோலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர்கள் கதி என்ன ஆனது? என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை.