
ஆளுங்கட்சியை நம்பி இருந்தால் நானும் மாவு அமைச்சராகவே இருந்திருக்க வேண்டும் - பழனி திகாம்பரம்
" இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான போராட்டம் மலையக மண்ணில் இருந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, தலவாக்கலையில் ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று, அரசை வீட்டுக்கு அனுப்ப எம்முடன் அணிதிரளுங்கள்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அறைகூவல் விடுத்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின விழா, நேற்று ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்னும் 20 வருடங்கள் இந்த அரசை அமைக்கமுடியாது, தங்களுடன் வந்துவிடுங்கள் என எமக்கும் ஆளுங்கட்சியின் அழைப்பு விடுத்தனர். நம்பி சென்றிருந்தால் இன்று மலையக அமைச்சர் போன்று, மாவு அமைச்சராகவே இருந்திருக்க வேண்டும். 20 வருடங்கள் என சூளுரைத்தனர். இன்று இரண்டு வருடங்களிலேயே வீடு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான பாரிய போராட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். அதன்பின்னர் ஏப்ரல் 03 ஆம் திகதி தலவாக்கலையிலும் நடைபெறும். அதில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்." - என்றார்