
உக்ரைன் தலைநகரில் நுழைந்தது ரஷிய படை
ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. ரஷிய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்கின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.
அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது.
ரஷியாவின் அதிரடி தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. உக்ரைன் ராணுவம் தரப்பில் 40 பேர், பொதுமக்களில் 10 பேர் இறந்ததாகவும், ரஷிய கிளர்ச்சி படையைச்சேர்ந்த 50 பேரை உக்ரைன் ராணுவம் சுட்டுக்கொன்றதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்தது.
இடைவிடாமல் வான் தாக்குதலுக்குப் பிறகு, ரஷிய படைகள் தலைநகர் கீவில் நுழைந்தன. கீவ் நகரின் வடக்கு பகுதியில் ரஷிய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தியபடியே முன்னேறி செல்கின்றன. உக்ரைன் நாட்டின் போர் விமானத்தையும் ரஷிய படை சுட்டுவீழ்த்தியதாகவும் இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.