
ஆந்திரா கனமழை - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. மழை சற்று திசைமாறி ஆந்திரா நோக்கி சென்றது.
ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கின. கார்கள், டூவீலர்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழைக்கு ஆந்திராவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 17-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதல் மந்திரியிடம் கேட்டறிந்தபிரதமர் மோடி, ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
இந்நிலையில், ஆந்திர சட்டப் பேரவையில் அம்மாநில வேளாண்துறை மந்திரி கொரசாலா கண்ணபாபு ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆந்திராவில் 4 மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 34 பேர் இறந்துள்ளனர். இன்னும் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 8 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 5 லட்சத்து 33 ஆயிரம் விவசாயிகள் பயிர் சேதத்தைச் சந்தித்துள்ளனர். பலியான கால்நடைகள், சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.