
சஹ்ரானின் மனைவியை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியா எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியா தொடர்பான வழக்கு இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கினை கல்முனை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்கியதுடன் குறித்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க அனுமதி வழங்கினார்.
இதுவரையில் கொழும்பில் நடைபெற்ற இந்த வழக்கு இன்று தொடக்கம் கல்முனை மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கான பணிப்புரையே இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.என்.அப்துல்லா உத்தரவிட்டார்.