
கொவிட் குழு கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானங்கள்
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூன்றாவது டோஸ் நவம்பர் முதலாம் திகதியிலிருந்து...
• தகுதியுடைய அனைத்து பிள்ளைகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி ….
• மாகாணத்துக்குள்ளான புகையிரத போக்குவரத்து சேவை திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பம்...
• மாகாணங்களுகிடையிலான புகையிரத போக்குவரத்துச் சேவை நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்...
• மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடையை 31ஆம் திகதிக்குப் பின்னர் நீக்குவதற்கு அவதானம்...
சுகாதாரம், பாதுகாப்பு, விமான நிலையம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஈடுபடுவோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூன்றாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை நவம்பர் முதலாம் திகதியிலிருந்து செலுத்த ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அதேபோன்று, தகுதியுடைய அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசியை வழங்கி நிறைவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி தகுதியுடைய அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசிகளை வழங்கி நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் பாரிய அர்ப்பணிப்பின் மூலம் மிகவும் வேகமாக கொவிட் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க முடியுமாக இருந்தது. அந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, தற்போதைய மரண எண்ணிக்கையை சூன்யமாக்குவதற்கும் மற்றும் நோயாளிகள் இனங்காணப்படும் பிரதேசங்கள் பற்றி கவனத்தை செலுத்தி நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதன் அவசியம் பற்றி ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நேற்று (22) பிற்பகல் கொவிட் தடுப்பு விசேட குழுவுடன் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.