
அமெரிக்க படைகள் வெளியேறுவதில் தாமதமானால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - தலீபான்கள் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் படையினர் பெரும்பாலானோரை அமெரிக்கா திரும்பப்பெற்றுவிட்டது. இதனால், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் விளைவாக ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.
காபூல் விமான நிலையத்தில் இருந்து இந்த மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் மக்களும் அகதிகளாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த மீட்புப்பணிக்கான காபூல் விமான நிலையத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தங்கள் படையினர் முழுவதையும் திரும்பபெற்றுவிடுவோம் என அமெரிக்கா தலீபான்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், ஒப்பந்ததின்படி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு அமெரிக்கா தங்கள் படைகளை திரும்பபெறுவதில் தாமதம் ஏற்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலீபான் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பின்னரும் நிலைநிறுத்துவது குறித்த இறுதி முடிவை அதிபர் ஜோ பைடன் தான் எடுக்க வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.