
சிம்பன்ஸியுடனான 4 வருட காதல் முடிவு - கண்ணீர் விட்டு கதறிய பெண்
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு, ஏடி டிம்மென்ஸ் என்ற இளம்பெண் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அதைப் பார்த்த பூங்கா ஊழியர்கள் இதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளனர்.
நான் விலங்குகளை நேசிக்கிறேன். அதனால் அடிக்கடி வருகிறேன் என அவர் கூறியுள்ளார். அதன்பின் பூங்கா ஊழியர்கள் அந்தப் பெண்ணை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஒரு குறிப்பிட்ட 38 வயதுடைய சிட்டா என்ற ஆண் சிம்பன்ஸி குரங்கிடம் மட்டுமே டிம்மென்ஸ் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
கண்ணாடிக் கூண்டுக்கு வெளியே இருந்தபடி அந்த சிம்பன்ஸிக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதே போல் சிம்பன்ஸியும் டிம்மென்சுக்கு முத்தம் கொடுத்துள்ளது. இதுகுறித்தும், பூங்கா ஊழியர்கள் விசாரித்துள்ளனர். அதற்கு அந்த இளம்பெண் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
நான் சிட்டாவை காதலிக்கிறேன் எனக்கூறி திடுக்கிட வைத்துள்ளார். நான்கு ஆண்டுகளாக இவர்களது காதல் தொடர்ந்துள்ளது. இதையடுத்து இதை உடனே தடுக்க வேண்டும் என உயிரியல் பூங்கா அதிகாரிகள் முடிவு செய்தனர்.
டிம்மென்ஸ் உடனான நட்பால் சிட்டா, மற்ற சிம்பன்ஸிகளுடன் பழகுவதைத் தவிர்த்து வருவதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சிட்டாவை மற்ற சிம்பன்ஸிகளும் ஒரு பொருட்டாக கருதவில்லை. இது சிட்டாவுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் கருதினர்.
உயிரியல் பூங்கா அதிகாரிகள் டிம்மென்சை ஆன்ட்வெர்ப் உயிரியல் பூங்காவுக்கு வர தடை விதித்தனர். ஆனால், ‘நான் சிட்டாவை மிகவும் விரும்புகிறேன். அவனும் என்னை விரும்புகிறான். நான் வேறு எந்த தொந்தரவும் செய்யவில்லை. வாரந்தோறும் வந்து பார்த்து விட்டு சென்று விடுவேன்’ என டிம்மென்ஸ் கூறினார்
இதனை பூங்கா அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். இதனால், மற்ற பார்வையாளர்களை எல்லாம் அனுமதிக்கும்போது எனக்கு மட்டும் தடை விதிப்பது நியாயம் அல்ல என கண்ணீர் விட்டு அழுதபடி டிம்மென்ஸ் பூங்காவை விட்டு வெளியேறினார். நான்கு வருடமாக சிம்பன்சியும், பெண்ணும் காதல் செய்தது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது.