
தாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை இரவிலும் ரசிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் யமுனை நதிக் கரையோரம் அமைந்துள்ளது தாஜ்மஹால். பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள, வரலாற்றுப் புகழ் வாய்ந்த காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹால் இரவு நேரத்தில் நிலவொளியில் மின்னுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இதனை ரசிக்க ஏராளமானோர் வருவர். கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச் 17ல் இரவு பார்வையாளர்களுக்கு தாஜ்மஹால் மூடப்பட்டது. இன்று முதல் இரவு நேரத்தில் மூன்று பிரிவுகளாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
ஆக்ரா தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வசந்த்குமார் ஸ்வரன்கர் கூறியதாவது, தாஜ்மஹாலை இரவில் ரசிக்க ஆக., 21, 23, 24 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இரவு 8:30 – 9:00; 9:00 – 9:30; மற்றும் 9:30 – 10:00 மணி வரை என மூன்று பிரிவுகளில் அனுமதி வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும், தலா 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்கான டிக்கெட்டை ஆக்ரா மால் சாலையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி கிடையாது.