
ஏழரை ஆண்டுகள் பெரும் சித்தரவதைக்கு உள்ளானேன்- சசி தரூர்
சுனந்தா புஷ்கர் மரண வழக்கிலிருந்து அவரது கணவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சசி தரூர், மிகவும் நன்றி நீதிபதி அவர்களே. கடந்த ஏழரை ஆண்டுகள், பெரும் சித்தரவதைக்கு உள்ளானேன். இத்தீர்ப்பை வரவேற்கிறேன் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பியாக இருந்தவர் சசி தரூர். இவர் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து டெல்லி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும் கொடுமைப்படுத்தியதாகவும் சசி தரூர் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. சசி தரூர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.