
ஜனாதிபதிக்கு வைத்தியர்கள் எழுதிய அவசர கடிதம்
தற்போது அமலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்ப்படுத்துமாறு இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.நாளை (21) முதல் பயணக்கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் அரசாங்கத்தின் தீர்மானமானது கவலைய அளிப்பதாகவும் அவர்கள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டில் நாள் தோறும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்களும் 50 க்கும் அதிகமான மரணங்களும் பதிவாகி வருகின்றது.மேலும் கொவிட்-19 வைரஸின் டெல்டா திரிபு சமூகத்தில் பரவலாக இருப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.இந்த திரிபு வைரஸ் தற்போது ஆதிக்கம் செலுத்தும் திரிபை விட ஐம்பது சதவீதம் அதிகமாக பரவக்கூடியது. முடக்கலின் தளர்வு ஒரு சில நாட்களில் பரவலான ஆபத்தான பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதுடன், புதிய மாறுபாட்டின் பரவல் மூலம் முன்னோடியில்லாத அளவிற்கு கொவிட் தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என்பதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வடையும் என்றும் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.