
வீட்டில் பூட்டை உடைத்து திருடியவர் 24 மணி நேரத்தில் கைது
சுன்னாகம் கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து திருடப்பட்ட நகைகள், பணம் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சுன்னாகம் கந்தரோடை பாரதி வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை வீட்டில் பூட்டை உடைத்து 21 பவுன் தாலிக்கொடி, மூக்குத்தி, உண்டியல் பணம் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன திருடப்பட்டன.
வீட்டில் இருந்தவர்கள் அயலில் உள்ள காணி துப்புரவு செய்ய சென்றிருந்த வேளை இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று மாலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸின் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேக நபரை இன்று (12) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
நல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.