
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சோனியா, ராகுல்
காங்கிரசின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி உடல் நலக்குறைவாக உள்ள நிலையில் தற்போது கிட்டத்தட்ட ராகுல்காந்திதான் கட்சியை வழிநடத்தி வருகிறார். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ட்விட்களை பதிவிட்டு மத்திய அரசை கடுமையாக சாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
சென்ற வருடம் முழுவதும், கொரோனா பரவலை மத்திய அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது என்று குற்றம்சாட்டி வந்த ராகுல் காந்தி இந்த ஆண்டு, தடுப்பூசி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர் வெளியிட்ட தடுப்பூசி தொடர்பான ட்விட்களைப் பார்த்தால், அதில் தனிமனித தாக்குதல்தான் அதிகம் இருப்பதை காணமுடியும்.
தடுப்பூசி, ஆக்சிஜனுடன் சேர்த்து பிரதமர் மோடியையும் காணவில்லை என்றும், மத்திய தலைமை செயலக கட்டிட திட்டத்துக்காகச் செலவிடும் 13,450 கோடி ரூபாயின் மூலம் 45 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும். ஆனால் மக்களின் உயிரைவிடப் பிரதமரின் ஈகோதான் பெரியது” என்றும் சாடினார்.
பிரதமர் மோடி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட மாநிலங்களுக்கு மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிற 21-ந் தேதி முதல் வழங்கும் என அதிரடி காட்டினார்.
உண்மையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை ராகுல்காந்தி வரவேற்று இருக்க வேண்டும். மாறாக, தடுப்பூசி போடுவது மாநிலங்களின் சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட விஷயம். எனவே தடுப்பூசிகளை எங்கள் வசமே கொடுக்கவேண்டும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது என்று கோரிக்கை வைக்கும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் சேர்ந்து ராகுலும் குரல் எழுப்புகிறார். அதாவது ஒரே மாதத்தில் இவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை அப்படியே மாற்றி கொண்டு விட்டனர் என்பது தெளிவாகிறது.
எப்போது பார்த்தாலும் தடுப்பூசி தடுப்பூசி என்று பேசும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை என்பதை பாஜக அம்பலப்படுத்தி இருக்கிறது.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு சோனியாவும், ராகுலும் தொடர்ந்து தடுப்பூசி பற்றி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி பற்றி ஏராளமான சந்தேகங்களை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டனர்.
ஆனால் எனக்கு தெரிந்தவரை சோனியாவும், ராகுலும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் ஏன் இந்திய தடுப்பூசிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும்” என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேசிய கட்சியின் இரு பெரும் தலைவர்களே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது கவலை தரக்கூடிய விஷயம்தான்!