
2029 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றுவோம் - நாமல் ராஜபக்ஷ
அம்பாந்தோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான சந்திப்பின் போது, 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அதிகளவான உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம். 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியதை போன்று இம்முறையும் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம்.
தேசிய பொருளாதாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். எமது ஆட்சியில் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்திகளுக்கு விசேட திட்டங்களை முன்னெடுத்தோம். ஆகவே கிராமிய மக்கள் கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் எமக்கு ஒப்படைப்பார்கள்.
தேசிய பொருளாதாரத்தையும், கிராமிய பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியது.இருப்பினும் அந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. கிராமிய பொருளாதாரம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.
விவசாயம் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுத்த புதிய திட்டங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தற்போது அழைப்பு விடுக்கும் ஆளுங்கட்சியினர் தான் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களுக்கும் எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நாட்டின் நலனை கருத்திற்கொண்டு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.இந்த அரசாங்கம் ஆறுமாத கால பதவியை நிறைவு செய்துள்ளது.இருப்பினும் எவ்விதமான புதிய திட்டங்களும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை என்றார்.