
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து ஜூன் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டை தாரர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நடமாடும் கடைகள் மூலம் காய்கறி, பழங்கள் தொடர்ந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.