
முஸ்லிம்களை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியவர் பிரதமர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 76 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு நல்லாசி வேண்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட துஆப்பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த நாட்டு முஸ்லிம்களை அன்று புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியவர் தான் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
திணைக்களத்தில் தலைவர் இப்ராஹிம் அன்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில், ´கடந்த 14 வருடங்களாக நான் அவருடன் சேர்ந்து வேலைசெய்து வருகின்றேன். எனது செயல்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
அவர் சகல இன மக்களையும் சமமாக பார்க்கக்கூடிய ஒருவர். மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஆட்சியை ஏற்றபோது இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
குறிப்பாக வடக்கு மாகாண முஸ்லிம்களை விடுதலைபுலிகள் பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு குறுகிய கால அறிவித்தல் மூலம் வெளியேற்றினார்கள். இவ்வாறு வெளியேற்றியவர்களை, பயங்கரவாதத்தை ஒழித்து மீண்டும் தங்களது சொந்த பிரதேசங்களுக்கு செல்லக்கூடிய நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலம் அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழிநடத்தக்கூடிய தலைவராகக் காணப்படுகின்றார்.
சிலர் கூறினார்கள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது அவர்கள் கேட்பதை கொடுத்து பிரச்சினையை தீர்க்குமாறு. இப்படிப்பட்ட நிலையிலேயே பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி கொடுத்தவர்.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமைகளால் எல்லா முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சிறந்த முடிவுகளை எடுத்து தீர்த்து வைத்துள்ளார். ஓட்டமாவடியில் இடம் ஒதுக்குவதில்கூட அவரின் ஒத்துழைப்பு கிடைத்தது.
உதிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களை ஏனைய சமூகத்தினர் சந்தேகத்துடன் பார்த்து வருகிறார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கான நிலைமையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.´ என்றும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.