- · 5 friends
-
I
பணக்காரன் (படித்ததில் பிடித்தது ---- குட்டிக்கதை)
அவர் ஒரு ஞானி. அதிகமாய் யாரிடமும் பேசுவதேயில்லை பேச்சு குறைவுதானே ஒழிய அவரைப்பற்றிப் பேசாதவரே அவ்வூரில் இல்லை. அந்த அளவினுக்கு அவர் புகழ் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்தது.
அவர் பாதம் பட்டால் பூமி பொன்விளையும், அவர் பார்வைப் பட்டால் நோய்கள் குணமடையும், அவர் வார்த்தைச் சொன்னால் வானம் பூச்சொரியும், அவர் வாழ்த்திச்சொன்னால் வாழ்க்கை நிறைவடையும்!
மொத்தத்தில் திரிகடுகம் தந்த நல்லாதனார் குறிப்பிடும் "கொண்டன செய்வகைச் செய்யும் தவசி"யாக விளங்கி வந்தார் அவர்.
தவச்சீலரான அந்த மகான் பார்வை தம்மீது பட்டுவிடாதா என்று எண்ணற்றோர் ஏங்கிக் கிடக்க... அவர்களுள் ஒருவராக இருந்தான் அந்த ஊரில் மிகப்பெரிய செல்வந்தனாக விளங்கி வரும் தனவந்தன். எந்த நேரத்தில் அவன் தந்தை அவனுக்கு அப்பெயர் சூட்டினாரோ எப்படிச் சூட்டினாரோ தெரியாது. ஆனால் பெயருக்கு ஏற்றார்போல் அவன் தனம் வந்தவனாக இருந்தானே ஒழிய ஒருபோதுமவன் தனமோ தானமோ தந்தவனாகவே இருந்ததில்லை. அப்படிபட்ட அவனுக்கு இந்த மகானை அழைத்து ஒரு வேளை உணவிட்டு அவர்தம் ஆசியை பெற்றுவிட வேண்டும் அப்படி செய்துவிட்டால் தன்னிடமிருக்கும் செல்வம் இன்னும் பன்மடங்கு பெருகும் என்பது அவனது பேராசையாக இருந்தது. அவனது இந்த எண்ணம் மகானின் புகழுக்கு மங்காத அளவினுக்கு அவ்வூரெங்கும் தெரிந்திருந்தது. இதுகுறித்துப் பலர் முதுகுக்குப்பின் முரண்பட்டு நின்றாலும் முகத்துக்கு முன் முறுவலோடு விரைவில் நடக்கும் என்றே கூறிச்சென்றனர் அவனிடத்தில்.
இந்த நிலையில்தான் அந்த செய்தி அவனது வேலைக்காரனான முருகன் வாயிலாக அவனுக்கு முன்னறிவிக்கப்பட்டது. அதை கேட்டதும் அவனுக்கு தலைகால் பிடிபடவில்லை. ஊர் மொத்தமும் அதையறிந்து ஒருபுறம் வியப்பிலும் மறுபுறம் தவிப்பிலும் ஆழ்ந்தது. அதற்கெல்லாம் காரணம் எத்துணைச் செல்வமிருந்தும் அவன் எவருக்கும் ஈந்தததில்லை. ஏன் பல்லாண்டுகாலமாக தன்னிடம் பணிபுரியும் வேலைக்காரனான முருகனுக்குக்கூட அவன் முகமிரங்கியவனில்லை என்பதாகத்தான் இருந்தது.
அவனது வேலைக்காரனான முருகனோ தனவந்தனுக்கு நேரெதிரான குணம்கொண்டவனாக இருந்தான். இருப்பதை கொடுப்பதில் ஈடற்றவனாக, உழைப்பதை கொடுப்பதில் உயர்ந்தவனாக, நன்றியை செய்வதில் நன்னெறியாளனாக இருந்தான். ஆனால் செல்வத்தில் மட்டும்
செய்வதறியா வறியவனாகவே அவனிருந்தான். இப்படிபட்ட நிலையிலும் நேர்மையும் வாய்மையும் தவறாதிருந்த முருகனிடத்தில் முனிவர் சொன்னது இதுதான்.
"நாளை நான் விருந்துண்ண வருகிறேன்... இதை உன் முதலாளியிடம் சொல்லிவிடு" என்பதுதான்.
தனவந்தனின் வீடு தயார் நிலையிலிருந்தது...
ஞானி தன் ஒற்றைச் சீடனான க கார்த்திக்கோடு தனவந்தன் வீட்டிற்கு வருகை தந்தார். தடபுடல் வரவேற்புக்குப்பின் விருந்துண்ண அமர்ந்தனர் இருவரும்.
இலைகளை விரித்து... படையலிடத்தொடங்கினான் முருகன் பார்வையாலேயே அதிகாரம் செய்துகொண்டிருந்தான் தனவந்தன். பசியாறி எழுந்தனர் இருவரும்.
இனி என்ன ஆசிபெற வேண்டுமல்லவா வாசல்வரை வந்து வழினுப்ப வந்தான் தனவந்தன். ஞானியோ பேசுவதாக இல்லை. வந்தவழியே திரும்பிச்செல்லத்தொடங்கிய ஞானியிடத்தில் சீடன் கேட்டான்.
"குருவே விருந்தைப்பற்றியும் விருந்தளித்தவர்பற்றியும் ஏதும் கூறாமல் திரும்பிவிட்டீர்களே?"
மெல்ல வாய்மலர்ந்தார் ஞானி...
"ஓர் ஏழையின் ஏற்பாட்டில்... ஒரு செல்வந்தனின் உபசரிப்பில் எல்லாம் நிறைந்தது"
"குருவே ஏற்பாடு செய்த தனவந்தனோ செல்வந்தன். உபசரித்த முருகனோ ஏழை! நிதர்சனம் இப்படியிருக்க தாம் இப்படி மாற்றி உரைப்பது சரியா?"
மெல்ல முறுவலித்து தொடர்ந்தார் ஞானி...
"வளர்வதும் தேய்வதுமான செல்வத்தைக்கொண்டு வறியவன் பெரியவன் என்கிற தீர்மானத்திற்கு வருவோர்க்கு அப்படித்தான் தெரியும்"
"எனில் வறியவர் பெரியவர் என்பதை எப்படி தீர்மானிப்பது குருவே?
"வளர்க்கவும் இயலா தேய்க்கவும் இயலா பெருஞ்செல்வம் நம் அனைவரிடத்தும் உள்ளது. அதுதான் காலம். கோடிகளால் நிரம்பிய தனவந்தனுக்கும் ஒருநாள் என்பது ஒருநாள்தான் தெருக்கோடியிலிருக்கும் முருகனுக்கும் ஒருநாள் என்பது ஒருநாள்தான் செல்வத்தால் நொடியைக்கூட கூடுதலாக மாற்ற இயலாதபோது காலத்தின் முன் அதன் மதிப்பு கடுகாகி சிறுத்துவிடும். ஆனால் அதே காலத்தை தன்னலத்தோடு மட்டுமின்றி பிறர் நலத்துகாக செலவு செய்கிற முருகன் போன்றவர்கள் ஞாலத்தில் ஏழையாக இருப்பினும் காலத்தாற் என்றென்றும் செல்வந்தர்களே"
"சிறப்பாக சொன்னீர்கள் குருவே சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்" என்றான் சீடன்.
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·