பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘துரந்தர் 2’. இத்திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என
மதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில், இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
தேர்தலுக்கு பின் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளை இப்படம் பாராட்டும் வகையில் உள்ளதால் இத்திரைப்படத்தின் திரையிட்டிருப்பது, நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று வாதிட்டிப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை என தெரிவித்தனர்.
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள பெண் நோயாளிகளிடம் மருத்துவ ஒழுக்கவிதிகளை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மகப்பேறு மருத்துவர் ராபர்டோ பெர்னாண்டஸ் என்பவருக்கு மூன்று மாத கால பணி இடைநீக்கம் விதித்து கியூபெக் மருத்துவர் சங்கம் (Quebec’s College of Physicians) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட 80 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கையில், டாக்டர் பெர்னாண்டஸ் தனது நோயாளிகளைத் தொடர்ச்சியாக அவமதித்ததாகவும், அவர்களின் வலியைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் எட்டுப் பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த சாட்சியத்தில், கருப்பையக சாதனத்தை (IUD) மாற்றச் சென்றபோது, மருத்துவர் எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி மிகவும் கொடூரமான முறையில் நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
"வலி தாங்க முடியாமல் நான் அலறியபோதும், கத்துவதில் பயனில்லை என்று கூறி அவர் தனது பணியைத் தொடர்ந்தார்; சிகிச்சைக்குப் பின் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்றார்" என்று அந்தப் பெண் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த சிகிச்சைக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்குக் கடுமையான கருப்பைத் தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மற்றொரு நோயாளி, மருத்துவர் தன்னிடம் மிகவும் ஆக்ரோஷமான தொனியில் பேசியதாகவும், இது போன்ற சிறிய பிரச்சனைகளுக்கு தன்னிடம் வராமல் பொது மருத்துவரைப் பார்க்குமாறு கூறி அவமதித்ததாகவும் புகாரளித்துள்ளார்.
டாக்டர் பெர்னாண்டஸ் மீண்டும் இது போன்ற தவறுகளைச் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை வாரியம் கருதினாலும், அவர் இடைநீக்க காலத்திற்குப் பிறகு மீண்டும் பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அவர் நோயாளிகளிடம் மென்மையாக நடந்துகொள்ளவும், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும் இந்த மாதம் முதல் ஆறு மாத கால சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்கு் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான்.
எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும் பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள்.
தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.
ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ”தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்” என்று கூறினார்.
அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ”அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார்.
அதற்கு அனுமன், ”தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்” என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ”அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்கு காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான்.
பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், ‘லட்சுமணா, லட்சுமணா’ என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன்.
அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன்.
ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.
எனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே” என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துகொண்டார்.
நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.
இதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார்.
மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.
இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை, ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தாமே வரும்’ என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
நாம் சிலரைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே அவர்களைப் பிடித்துவிடும். ஆனால், சிலரிடம் எவ்வளவு நேரம் பேசினாலும் ஒரு ஒட்டுதல் இருக்காது. ஏன் இப்படி நடக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா?
உளவியலின்படி, மக்கள் தங்களைப் போலவே இருக்கும் நபர்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இந்த உளவியல் உண்மையை அடிப்படையாகக் வைத்து, எதிரில் இருப்பவரை நமக்குத் தெரியாமலேயே ஈர்க்கும் ஒரு அற்புதமான கலையைத்தான் 'மிரரிங்' (Mirroring) என்று உளவியலாளர்கள் சொல்கின்றனர்.
அது என்னது 'மிரரிங்'?
பெயரிலேயே இதற்கான அர்த்தம் இருக்கிறது. 'கண்ணாடி' (Mirror) எப்படி நம் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கிறதோ, அதேபோல் நாமும் எதிரில் இருப்பவரின் செய்கைகளை, பேச்சுவழக்கை, உடல்மொழியைப் பிரதிபலிப்பதுதான் மிரரிங். இரண்டு நெருங்கிய நண்பர்கள் அல்லது காதலர்களைக் கவனித்துப் பாருங்கள்.
அவர்கள் அறியாமலேயே ஒரே மாதிரியாக உட்கார்ந்திருப்பார்கள், ஒரே நேரத்தில் கையை அசைப்பார்கள், ஒரே மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். இதை நாம் செயற்கையாக, செய்வதன் மூலம் அறிமுகமில்லாத ஒருவரைக் கூட நம் நண்பராக்க முடியும்.
உடல்மொழியில் மிரரிங்!
ஒருவர் உங்களிடம் பேசும்போது காலின் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்களும் அதேபோல உட்காரும்போது, அவர் ஆழ்மனதில் "இவன் என்னைப் போலவே இருக்கிறான், இவன் பாதுகாப்பானவன்" என்ற எண்ணம் உருவாகிறது.
அதேபோல் அவர்கள் முன்னோக்கிச் சாய்ந்து பேசினால், நீங்களும் சாயலாம். அவர்கள் கைகளை அசைத்துப் பேசினால், நீங்களும் பேசும்போது அதே பாணியைக் கடைப்பிடிக்கலாம். இது ஒரு மிகச் சிறந்த பிணைப்பை உருவாக்கும்.
குரல் மற்றும் வார்த்தைகள்!
உடல்மொழி மட்டுமல்ல, குரலையும் மிரரிங் செய்யலாம். எதிரில் இருப்பவர் மெதுவாக, நிதானமாகப் பேசுகிறவர் என்றால், நீங்கள் மட்டும் படபடவெனப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. நீங்களும் உங்கள் வேகத்தைக் குறைத்துப் பேச வேண்டும்.
அவர்கள் உற்சாகமாகப் பேசினால், நீங்களும் அந்த உற்சாகத்தைக் காட்ட வேண்டும். மேலும், அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சில வார்த்தைகளைக் கவனித்து, அதே வார்த்தைகளை நீங்களும் உங்கள் பேச்சில் பயன்படுத்தும்போது, அவர்கள் உங்களை தங்களில் ஒருவராக உணர ஆரம்பிப்பார்கள்.
எச்சரிக்கை!
இந்த வித்தையில் மிக முக்கியமான விஷயம் 'நேர்த்தியாக' செய்வது. அவர் மூக்கைத்தொட்டால், உடனே நீங்களும் மூக்கைத்தொட்டால் அது அவரைக் கிண்டல் செய்வது போலாகிவிடும். அவர் ஒரு செயலைச் செய்த சில வினாடிகள் கழித்து அல்லது மெதுவாக நீங்களும் அதைச் செய்யவேண்டும்.
இது இயற்கையாக நடக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடித்துவிட்டால், அது மிகப்பெரிய எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடும். எனவே, இதை ஒரு கலையாகப் பயிலவேண்டும்.
எதிரில் இருப்பவரின் உடல்மொழி மற்றும் பேச்சுக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளும்போது, உலகம் உங்களை ரசிக்கத் தொடங்கும். உங்களைப் போலவே இருக்கும் ஒருவரை உங்களுக்குப் பிடிக்காமல் போகாது என்பதுதான் இதன் அடிப்படை உளவியல்.
முடியவே முடியாது. இவனெல்லாம் நிச்சயமாக சினிமாவுக்கு வர வாய்ப்பே இல்லை."
ஒரு சிறுவனின் ஜாதகத்தை பார்த்து விட்டு, ஒரு ஜோதிடர் கணித்த கணிப்பு இது. "நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவன் ஜாதகப்படி, திரை உலகத்துக்கும் இவனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது."
இப்படி அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டு, அந்த சிறுவனின் தாய் கவலை அடைந்தார். ஏனென்றால் சினிமாவுக்கு போய் ஜெயித்துக் காட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று அடம் பிடித்தான் அவருடைய மகன்.
ஜோதிடர் சொன்ன எதிர்மறையான கருத்தைக் கேட்டு அந்தப் பையன் வருத்தம் கொள்ளவில்லை; வைராக்கியம் கொண்டான்.
அந்த ஜோதிடரின் இடத்தில் வைத்தே அவரிடம் சவால் விட்டான்.
"ஜோதிடர் அய்யா, நல்லா கேட்டுக்கோங்க. உங்கள் ஜோதிடத்தை நான் பொய்யாக்கிக் காட்டுகிறேன். சினிமாவில் நிச்சயமாக ஜெயித்து காட்டுகிறேன். உங்கள் கணிப்பு தப்பு என்பதை கட்டாயம் நிரூபிப்பேன்."
புறப்பட்டுப் போனான். போராடினான்.
புதிய புதிய முயற்சிகள் செய்தான்.
ஜோதிடரிடம் சவால் விட்டுச் சொன்னதை வெகு சீக்கிரத்திலேயே நிறைவேற்றிக் காட்டினான்.
அந்தச் சிறுவன்தான் பின்னாளில் பின்னணி பாடல்களில் தனி முத்திரை பதித்த பி.பி. ஸ்ரீனிவாஸ். டிஎம்எஸ் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்த காலத்திலேயே, தனக்கென்று ஒரு தனிக்கொடியை பறக்க விட்ட தனித்துவமான பாடகர்.
எத்தனை எத்தனை இனிய பாடல்கள் !
காலங்களில் அவள் வசந்தம்...
மயக்கமா கலக்கமா...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
ரோஜா மலரே ராஜகுமாரி...
நிலவே என்னிடம் நெருங்காதே...
'இனிமைக்கு இன்னொரு பெயர் பிபி ஸ்ரீநிவாஸ்' என்று எல்லோரையும் சொல்ல வைத்தார் பி பி ஸ்ரீநிவாஸ்.
சின்ன வயது ஜோதிடர் சம்பவம் பற்றி, பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது, "ஜோதிடம் உண்மையோ பொய்யோ, எனக்கு தெரியாது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.
நாம் உண்ணும் ஒவ்வொரு தானியத்திலும் நம் பெயர் எழுதியிருந்தால்தான் நாம் சாப்பிட முடியும். அது போலத்தான் நான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் ஆண்டவன் என் பெயரை எழுதியிக்கிறான். அதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது" என்று சொன்னார் பிபி ஸ்ரீநிவாஸ்.
அதனால்தான் ஏ எம் ராஜா பாட வேண்டிய 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பி பி ஸ்ரீநிவாஸ் பாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் பாடலை பாடிய பிறகு, அவரது புகழ் நினைத்தே பார்க்க முடியாத உயரத்திற்கு சென்றது.
'நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை...'
வெயில் காலத்தில் வரும் தோல் அரிப்பு, படர்தாமரை, தோல் நோய்களுக்கு இயற்கை வைத்தியம்.
மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும்.
🟠 பூவரசங் காய்
பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும்.
🟠 சந்தனம்
சந்தனக்கட்டையை எலும்மிச்சம் பழ சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.
🟠 குப்பை மேனி
ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை சேர்க்கவும். சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆற வைத்து எடுத்து வைத்து பூசி வர படர்தாமரை சரியாகும்.
தோலை பற்றி தொல்லை தரும் படர்தாமரைக்கு குப்பை மேனி மருந்தாகிறது. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது.
🟠 கீழாநெல்லி
கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டும் இல்லை.. தோல் நோய்களை போக்கும் தன்மையும் கொண்டது. கீழாநெல்லியை அரைத்து பற்று போட்டால் படர்தாமரை நோய் விலகும்.
🟠 பூண்டு
பூண்டு இந்த படர்தாமரைக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்களை சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். வடிக்கட்டி படர்தாமரை இருக்கும் இடத்தில் காலை, மாலை வேளையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் படர்தாமரை சரியாகும்.
🟠 தும்பை இலைகள்
தும்பை இலைகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தும்பை இலை பேஸ்டை எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விரைவில் குணமாக்கும்
