பாடசாலைகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்படும் மோசடிகள் தொடர்பில் கல்வியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு எதிராக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன எச்சரித்துள்ளார்.
பாடசாலைகளில் புதிதாக மாணவர்களைச் சேர்ப்பதில் சில இடங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் முறைகேடுகள் இடம்பெற்றால் கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு பிரதி அமைச்சர் கேட்டுள்ளார்
000
தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் பிரதேசத்தி ஆளுகைக்குட்பட்ட ஊர்காவற்றுறைக்கான பிரதான வீதியின் கரையோரப் பகுதி இன்று (04) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
வேலணை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த சிரமதானம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் குறித்த பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.
வேலணை பிரலதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச மக்களின் பங்களிப்புடன் குறித்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
00
வவுனியா அனந்தர் புளியங்குளம் சொச்சிகுளம் கிராமத்தில் குடும்பத்தகராறினால் மனைவியின் வெட்டிய தலையுடன் புளியங்குளம் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்த கணவன்- தனது மனைவியின் கழுத்தை அறுத்து தலையை மோட்டார்சைக்கிளில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.
இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இதனால் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கைத்தீவில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறபுள்ளதாக
SAFE LIFE அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைபாளர் சுதர்சிகா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -
பொலித்தீன் பாவனையால் இன்று மானுடர்கள் மட்டமல்லாது விலங்குகள் கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனை உயிரினங்களின் வாழ்வியலும் கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக ஒரு நாள் பாவனை பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பாவனையில் இருந்து இல்லாதொழிப்பது அவசியமாகும்.
ஆனாலும் ஆபத்து என்று தெரிந்தும் பாவனையாளர்கள் அந்த பாவனையில் இருந்து விடுபடுவதாக தெரியவில்லை.
சில பொலித்தீன்கள் ஒன்று மண்ணுள் புதையும் போது அது உக்கலடைய 1000 ஆண்டுகள் செல்கின்றன. இதனால் பல்வேறு தாக்கங்களை உயிரினங்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது.
அந்தவகையில் பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.
அதனடிப்படையில் நாம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டமானது எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு யாழ் பொது நூலக பின் நுழைவாயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நூலகத்தின் பிரதான நுழைவாயில் வரை நடைபவனி நடைபெறவுள்ளது.
இதில் மாணவர்கள் பொதுனல விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை வலுப்படுத்தி விழிப்புணர்வின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
இன்று அதிகாலை பொன்னாலை பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது. இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது. வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தற்போது பரவிவரும் வைரஸ் தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்துகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இந்தியாவின் கேரள மாநிலத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணையச் சேவை வழங்குநரான ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்குத் தேவையான தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஸ்டார்லிங்க் இலங்கைக்கு வழங்கியவுடன், அதன் சேவைகள் இலங்கையில் செயற்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து முன்நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொடர்பு மற்றும் தகவல் கொள்கைக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தூதுவர் ஸ்டீவ் லாங்குடன் சிங்கப்பூரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஸ்டார்லிங்க் இணையச் சேவைக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அங்கீகாரமளித்தமை குறிப்பிடத்தக்கது.
000
அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உத்தியோகபூர்வ இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் உட்பட 15 பேர் கொண்ட குழு நேற்று (02) இரவு அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் குழு அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இவ் விஜயத்தின் போது, அவுஸ்திரேலிய துணைப் பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
இவ்விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறைசார் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
000
வடக்கு மாகாண பிரதம செயலாளராக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை செயலகத்தில் திங்கட்கிழமை (02) குறித்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பின் போது, இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் வீடமைப்பு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களை அவர்கள் பரிசீலித்ததுடன், வர்த்தகம், வணிகம் மற்றும் திறனறிவு மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வழிகளையும் கலந்துரையாடினர்.
அத்துடன் நடந்து கொண்டிருக்கும் திட்டங்களை சீராக செயல்படுத்துவதற்கும், வடக்கு மாகாணத்தின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கான புதிய துறைகளை ஆராயும் பணி குறித்த செயல்பாடுகளையும், இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
000
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் கைச்சாத்திடப்பட்டது.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன், க.நாவலனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலையே காணப்பட்டது.
தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களை தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பித்துள்ளது.
உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது.
குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதன்படி இரண்டு வருடங்களின் பின்னர் இரத்மலானை - பலாலி விமான நிலையத்திற்கு இடையிலான சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தபட்ட விமான சேவையானது மீண்டும் டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனத்தின் மூலம் இலங்கை விமான சேவைகள் அதிகார சபைக்கு விண்ணப்பிக்கபட்ட விண்ணப்பத்தினை பரிசீலிக்கும் முகமாக குறித்த தகுதி காண் சேவை இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த இலங்கை விமான சேவைகள் அதிகார சபை தலைமை அதிபதி கப்டன் தமிந்த றம்புக்வெல பிரதி பின்வருமாறு தனது கருத்தினை பதிவு செய்தார் -
குறிப்பாக இரண்டு வருடங்களின் பின்னர் இந்த சேவை ஆரம்பிக்கப்படுகிறது . எமது நோக்கம் இலங்கைக்குள் உள்நாட்டு விமான சேவைகளை வளர்ப்பதாகும் .
அதன் அடிப்படையில் டேவிட் பிரிஸ் குடும்பத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று தகுதி கான் சேவை பரிசோதிக்கப்பட்டது.
இதற்கமைவாக அனைத்து பரிசோதனை நடவடிக்கைகளிலும் டேவிட் பிரிஸ் விமான சேவைகள் சித்தி பெற்றுள்ளது .
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான கட்டுமாணங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பூர்த்தி செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது.
டேவிட் பிரிஸ் விமான சேவைகள் நிறுவனம் தமது சேவைக்கான கோரிக்கையை விண்ணாப்பிக்கும் பட்சத்தில் நாங்கள் அதனை அனுமதிப்பதற்கு தயாராக இருக்கின்றோம் .
இதேவேளை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தின் ஊடாகர எந்த ஒரு நாட்டிற்கும் இந்த விமான சேவையின் ஊடக பயணித்து தாங்கள் விரும்பிய சேவையின் மூலம் பயணிப்பதற்கு இந்த சேவை வலியுறுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த டேவிட் ஃபீரிஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானி இந்த சேவையினை வாராந்தம் மூன்று நாட்கள் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம் .
இருவழி கட்டணமாக 68,000 ரூபாய் அறவிடப்படும் . ஏழு கிலோ கிராம் பயணிகள் பொதி அனுமதிக்கப்படும் இதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும் .
வெகுவிரைவில் விமான சேவைகள் போக்குவரத்து அதிகார சபைக்கு கட்டுநாயக்கா வரை சேவையை விசாரிப்பதற்கு நாம் விண்ணப்பிப்பதற்கு தயாராக இருக்கின்றோம். பயண நேரமானது ஒரு வழிக்கு 1 மணத்தியாலம் 10 நிமிடம் தேவைபடும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது