
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவுநாள்
எவ்வளவோ இழப்புகளை பார்த்த நமக்கு ஒரு இழப்பு சட்டென தொண்டையை அடைத்தது.பாடும் நிலா பாலுவின் இழப்பு!..கொரோனா எனும் கொடிய அரக்கன் கொண்டு போன உயிர்களுள் விலை மதிப்பில்லாத உயிர்.பலரது வாழ்க்கை மூடு மந்திரமாகவே இருக்கும்.வெளியே ஒரு முகம் காட்டுவார்கள்.உள்ளே இன்னொரு கோர முகமிருக்கும்.ஆனால் பாலுவைப் பொறுத்த வரை ஒரே முகம் தான்.அதில் அன்பைத் தவிர வேறு எதையும் நாம் பார்க்க முடியாது.செயலில் நிதானம் பேச்சில் தெளிவு பார்வையில் கனிவு.பொது வெளியில் பாலு கோபப்பட்டு நாம் பார்த்ததே இல்லை!..அவரது குரலைப் போலவே பாலுவின் வாழ்க்கையும் அபஸ்வரம் இல்லாத வாழ்க்கை.படிக்க வந்த பாலுவின் வாழ்க்கையை இன்னொரு பக்கம் திருப்பிவிட்டது அவரது திரையுலகப் பிரவேசம்.
அவரது கடந்த கால வாழ்க்கை அனைவரும் தெரிந்தது தான்.முதல் படமே வெளியாகவில்லை.மக்கள் திலகத்திற்கு குரல் கொடுப்பது அந்தக் காலத்தில் பெரிய விஷயம்.மூலை முடுக்கெல்லாம் அவரைக் கொண்டு சென்றது அந்த ஆயிரம் நிலவு.நடிகர் திலகம் காதல் மன்னன் என பாலு எல்லோருக்கும் செட்டானது ஆச்சரியம்! ..எழுபதுகளின் பாலு இளைஞர்களுக்கானவன்.
பெக்யூலியர் வாய்ஸ்!.. உணர்வுகளை அவ்வளவு அழகாக வெளிப்படுத்த பாலுவால் முடிந்தது .எக்ஸ்ப்ரஷனை இன்னும் கொஞ்சம் நீங்க குறைச்சுக்கலாம்.மக்கள் திலகமே சொல்லும் அளவிற்கு குரலில் வித்தை காட்டிய அற்புதமான பாடகர்.எனக்கென்னவோ இளையராஜா வந்த பிறகு தான் இன்னொரு பாலுவை நமக்கு அடையாளம் காட்டினார் என தோன்றுகிறது.மெல்லிசை மன்னராகட்டும் திரை இசைத் திலகமாகட்டும் பாலுவை பட்டை தீட்டிய இரு மேதைகள்.இலக்கணம் மாறுதோ!.. பாடல் பதிவெல்லாம் முடிந்த பிறகும் மெல்லிசை மன்னரால் தூங்க முடியவில்லை.அந்தக் குரல் அவரை தூங்க விடவில்லை.மன்னருக்கே அந்த கதியென்றால் கேட்ட நமக்கு?. பாலுவின் டெடிகேஷன் அப்படி!..என்னை விட்டுடுங்க மாமா!.. சங்கரா பரணத்தின் சாஸ்திரிகள் குரலுக்காக பாலுவை நொங்கெடுத்த மகாதேவன்.பாலு கெஞ்சினார்.முதுகில நாலு போட்டு சொல்லிக் கொடுங்க! .. பெற்ற தந்தையே பச்சைக் கொடி காட்டினார்.புகழேந்தி பாலுவை பெண்டெடுத்தார்.நேஷனல் அவார்டு பாலுவின் கரங்களில்.முறையான சாஸ்த்ரீய சங்கீதம் அந்த சங்கரா பரணத்தின் மூலம் பாலுவின் வசமானது.
தனது திரை வாழ்க்கையில் பாலு பலருக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறார்.இந்தியத் திரையுலகமே பாலுவின் குரலுக்கு அடிமையாகக் கிடந்தது.ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் தந்த முக்கியத்துவம் அலாதியானது.பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா?. சாதாரண வார்த்தைகள் தான்.ஆனால் பாலு அதை டெலிவரி செய்த விதம் அட்டகாசம். பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு வெண் நிலவு முகிலில் போய் மறைய!.. அந்த வெண்ணிலவுக்கு பாலு தந்த அழுத்தம் இப்போதும் ஆச்சரியம். இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து!..அந்த இதழுக்கு பாலு தரும் முக்கியத்துவம் அற்புதம்.பேசிப் பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ?. இதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ?. இந்த இதழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமோ அந்த அளவிற்கு பாலுவின் குரல் மாறியிருக்கும்.நேரம் பௌர்ணமி நேரம் பாடலில் அந்தக் குரல் செய்யும் ஜாலங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.இளையராஜா பாலு கூட்டணி இன்னும் பல வித்தைகளைக் காட்டியது.அதிலும் நிலவுப் பாடல்கள் நம் நெஞ்சை விட்டு அகல மறுத்தன.கங்கையின் நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா ஒரு ஸ்வீட் மெலடி! .. பாடல் முழுவதும் ஒரு மெல்லிய சோகத்தை ஓடவிட்டிருப்பார் தனது குரலில்.அந்த இளைய நிலா பொழியும்போது இறுகிய மனமும் குளிரும்.வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுது இன்னொரு அழகு.நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது!.. இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர் பிறை!..பாலு கூடவே பாடத் தோன்றும்.காற்றில் மிதக்கும் ஃபீலிங்!..நிலாவே வா....பாலு அழைக்கும்போது நிலவு மகள் எட்டிப் பார்ப்பது நிச்சயம்.நினைவாலே அணைத்தேனே!.. உள்ளே ஏதோ உடையும்!..வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ?. அதென்னவோ நிலவுக்கும் அவருக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம்!..
மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு மோகப் பண் பாடுதே!..வாலியின் பூங்காற்று உன் பேர் சொல்ல பாடலின் வார்த்தை விளையாட்டுக்களில் வேறு யாரும் இப்படி ஈடுபட முடியாது .கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜா..தி.அது யார்?. அது யார்?. கேட்டாத் தெரியும் சேதி.அந்த காத்தோடு பூ உரச நம் நெஞ்சங்களை உரசிச் செல்லும்.பனி விழும் மலர் வனம் .இனி வரும் முனிவரும் தாளத்தோடு வர சேலை மூடும் இளஞ் சோலையில் பாலு பரவரமூட்டியிருப்பார்.உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன்! ..தேனுகா என்கிற வித்தியாசமான ராகம்.அதிகம் பயன்படுத்தாத ராகம்.உலகமெல்லாம் மறந்து போகும் மரணம் கூட இறந்து போகும்படியான பாடல்.தந்தேனே எந்தன் ஜீவனை எந்தன் சாவில் கூட சாதனை!..பூப்போன்ற உள்ளங்களே!.. வாழ்க வாழ்கவே!..அசத்தலான குரலில் பாலுவின் ஒவ்வொரு வார்த்தையும் உயிரோடு உலவும் பாடல்.கேதாரத்தில் இசை ஞானி தந்த அருமையான பாடல் தான் இது ஒரு பொன் மாலைப் பொழுது!..அந்த வான மகள் நாணுவதை பாலு குரலில் கேட்கணும்!..காக்கிச் சட்டையில் ஒரு அருமையான பாடல் தான் பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக்கொள்ளும்.முத்துலிங்கத்தின் அழகான தமிழை அசத்தியிருப்பார் பாலு.நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள்.உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள்.நாணம் யாவும் நூலாடை நானே உந்தன் மேலாடை!..இசையரசியோடு அவர் இன்பமாகப் பாடுவது இன்றும் நம்மை எங்கோ அழைத்துச் செல்லும்.வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகளில் வந்த பாலுவை எப்படி மறப்பது.?.
கங்கை அமரின் நிலவு தூங்கும் நேரத்தை மறக்க முடியுமா?. கீதை போல காதல் மிக புனிதமானது கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது.காதலின் கனிவும் குழைவும் ஒருங்கே தந்த பாலு.சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பல கோடி!..பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா!.. வந்தாய் கோபாலனே!.. வான் போல வண்ணம் கொண்ட கோபாலனாக பாலு!..துன்பம் என்றும் ஆணுக்கல்ல.அது அன்றும் இன்றும் பெண்களுக்கே!..துள்ளித் துள்ளி நீ பாடம்மா!.. சீதையைத் தாலாட்டிய பாலு!..முட்டை போடும் பெட்டைக் கோழியே!.. சேவல் கூட போராட்டமா? . கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில் பெட்டைக் கோழி தாங்காதம்மா!.. கோபத்திலும் குழைந்தோடிய குரல்!..பெண் மானே சங்கீதம் பாடி வா!.. அம்மானை பொன்னூஞ்சல் ஆடி வா!..தாயாக தாலாட்டிய பாலு!..தன்னை மறந்து மண்ணில் விழுந்து அங்கம் முழுதும் பொங்கும் இளமையோடு பூரித்த பாலு!..கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ!.. ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ?. சோகத்தின் உச்சம் தொட்ட பாலு!.. எத்தனையோ முக பாவனைகளுக்கு உயிரூட்டிய பாலு!..
பாலு முழுதாக நம்மை விட்டுப் பிரிந்த நாள் இன்று!..























