விசிறி சித்தர் (எ) யோகி ராம் சுரத்குமார்
ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகள், வாரணாசிக்கு அருகில் உள்ள நாராதாரா கிராமத்தில் டிசம்பர் 1,1918-ம் ஆண்டில் ராம்தத் குவார்-குசும்தேவி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக அவதரித்தார். இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் என இரு சகோதரர்கள்.குழந்தைப் பருவத்திலேயே யோகிகளையும் துறவிகளையும் சந்திப்பதில் ஆர்வத்துடன் இருந்தார்.கங்கை ஆற்றாங்கரையில் உலவுவது, துறவிகளுடன் உறவாடுவது என இருந்தார்.
ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டிருந்தவருக்கு ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. `இவரே...இவரே... இவரே என் குரு’ என்றவருக்கு மிகப் பெரிய கேவல் எழுந்தது.அதே நேரம் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து பாண்டிச்சேரியை நோக்கிப் பயணப்பட்டார்.ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை.ஆனாலும் சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது.மறுபடி திருவண்ணாமலை வந்தார்.அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார்.அந்தச் சமயத்தில் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்.பாண்டிச்சேரியில் அரவிந்தர் மறைந்தார் என்பது தெரியவர இடிந்துபோனார்.
மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு கிராமத்தில் இருந்த பப்பா ராமதாஸை நோக்கி பயணத்தைத் தொடங்கினார் ராம்சுரத்.ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார் பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமத்தை உபதேசித்தார். ''இடையறாது ராம நாமம் சொல்'' என்றார். ராம்சுரத்குமார் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி விகசித்துப் பொங்கியது. உடுப்பதும் உண்பதும் கூட மறந்து ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.
உள்ளுக்குள் ராம நாமம் பொங்க எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை எதுவும் புலப்படவில்லை. அவர் தன்வசம் இழந்தவராக சின்மயமானவராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார்.ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை `பித்து’ என்று வர்ணிக்கப்படும். `பைத்தியக்காரன்’ என்ற பட்டப்பெயர் கிடைக்கும். ராம்சுரத்குமாருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால் ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாகப் பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது. கிராமத்தின் மரத்தடிகளில் அமர்ந்து வேலைக்குப் போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.
உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் தொடர்பான விஷயம்தான். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை.அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார்.தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை.தனக்குள் உள்ள அந்த 'தான்' என்பதை அனுபவிக்கிறபோது வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை.இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியது தான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப் பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது.அவர் குடும்பத்தைவிட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு வந்தவர் ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்து இடையறாது ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை.கட்டு அறுந்து போயிற்று கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.கங்கை நதி மீது அவருக்கு இருந்த பக்தி, காசியில் தகனம் செய்யப்படும் உடலைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட ஞானத்தேடல், புத்தரின் நினைவாக தனது மகளுக்கு `யசோதரா’ என்று பெயர் சூட்டியது, பகவான் ரமணரைச் சந்தித்தது, அரவிந்தரைச் சந்தித்தது... இப்படி யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கையே ஆன்மிகத் தேடலாக இருந்துவிட்டது.
ஒருமுறை இருபது வயதுப் பையன் ஒருவன், சந்நதித் தெரு வீட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த யோகியாரைப் பார்த்து, ‘‘ஐயா நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’’ என்று ஆங்கிலத்தில் வினவினான். உடனே யோகியார், ‘‘கடவுளைத் தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லையே.வேறு ஏதேனும் இருக்கிறதா?’’ என்று சட்டென்று கேட்டார்.பிறருடைய கடுமையான பிரச்சனைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு கூறும் யோகியாரைக் கண்டு வியந்த பக்தை ஒருவர், ‘‘இது எப்படி முடிகிறது’’ என்று வினவ, யோகியார் பட்டென்று, ‘‘இந்தப் பிச்சைக்காரனுக்கு மனம் என்ற ஒன்று இல்லாததாலேயே அப்படிச் செய்ய முடிகிறது. எதையும் யோசித்துத் தீர்மானிப்பதற்கு இந்த உடலில் வேறு யாரும் இல்லை.தந்தை மட்டுமே இருக்கின்றார்’’ என்றார். ஒருமுறை பக்தர் ஒருவரிடம், ‘‘இந்தப் பிச்சைக்காரன் தந்தையைக் கேள்வி கேட்பதில்லை. தந்தை என்ன உத்தரவு இடுகிறாரோ அதற்குக் கீழ்ப்படிவது ஒன்றே இவன் அறிந்தது. தந்தைக்குத் தெரியும் எதைச் செய்வது எப்பொழுது செய்வது. எப்படிச் செய்வது என்று சொன்னார்.
‘ஆரம்பகாலத்தில் இந்தப் பிச்சைக்காரன் ஒரு பெரும் கஷ்டத்திற்குள்ளான பொழுது தந்தையிடம், ‘‘ஏன் என்னை கைவிட்டீர்கள் என்று கேட்டு அழுதான். அப்பொழுது ஒரு குரல் ‘‘ஏன் ராம நாமத்தை மறந்தாய்’’ என்றது. ராமநாமத்தை நாம் எப்பொழுதும் நினைவு கூர்ந்த வண்ணம் இருக்க வேண்டும். ராமநாமத்தை மறக்கும்பொழுது விதி விளையாடி விடும்,’ என்று சொல்லியிருக்கிறார் யோகியார்.
‘காளிதாசனின் ரகுவம்சத்தில் உள்ள சொல்லும் பொருளும் பிரிக்க முடியாதவை. அப்படியென்றால் என்ன? நீங்கள் ராமன் என்று சொல்லும்பொழுது ராமன் உங்களோடு இருக்கிறான்.சிவா என்று சொல்லும்பொழுது சிவன் கூடவே இருக்கிறார்.யோகி ராம்சுரத்குமார் என்று சொல்லும்பொழுது என் தந்தை கூடவே இருக்கிறார்.’ யோகியார். தன்னை எப்போதுமே பிச்சைக்காரன் என்றே அழைத்துக் கொண்டார். யோகியார் ஒருமுறை, ‘‘பிச்சை எடுப்பது இந்தியாவில் ஒரு குற்றம் அல்ல. இந்தப் புனித பூமியில் சாதுக்கள் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்தியா பெரிய பெரிய மகாத்மாக்களின் லீலா பூமி. பெரும் மகாத்மாக்கள் பிச்சைக்காரர்கள் உருவிலே வருவதுண்டு. இந்த மண்ணில், பிச்சைக்காரர்களை கைது செய்தால் மகாத்மாக்கள் இந்நாட்டை விட்டு சென்று விடுவர். மகாத்மாக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால்தான் அவர்கள் அருள்மிகு லீலைகளை இங்கே நிகழ்த்த முடியும்.
பிச்சைக்காரர்களை வேதங்கள் அனுமதிக்கின்றன. வேதங்களை தந்த மஹரிஷிகள், எல்லாம் அறிந்த ஞானிகள், வேதம் ஓதும் வேதியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும். ‘இந்தியா, ஐரோப்பா போன்ற நாடுகளைப்போல இருக்க வேண்டும். பிச்சை எடுப்பதை ஒழிக்க வேண்டும்’ என்று கூறினால் அது மிகவும் தவறு. பிச்சைக்காரனுக்கு ஒருவேளை உணவிடுவதால், அவன் கோடீஸ்வரனாகப் போவதில்லை,’’ என்று விளக்கியிருக்கிறார். யோகி ராம்சுரத்குமார் எப்போதுமே தம் மார்க்கமாக இறை நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பதையே கூறிவந்தார். நாமமே இறைவன்.அதுவே உங்களுக்கு முக்தியளிக்கும் என்று உறுதியோடு கூறினார். உங்களுக்கு எப்போதெல்லாம் பிரச்னைகள் வருகிறதோ அப்போதெல்லாம் ‘யோகி ராம்சுரத்குமார்... யோகி ராம்சுரத்குமார்... யோகி ராம்சுரத்குமார்’ என்று சொல்லுங்கள். அப்போதெல்லாம் என் தந்தை உங்களுக்கு உதவ வந்து விடுவார் என்பார்.
யோகி ராம்சுரத்குமார் அடிக்கடி, ‘‘இந்த ஆஸ்ரமம் முழுவதுமே தியானக் கூடம்தான். யார் உள்ளே நுழைந்தாலும் அவர்கள் மனதில் இயற்கையாகவே தியானத்தில் இருப்பது பொன்ற உணர்வு எழும். இதை அவர்கள் உணர்ந்தாலும் உணரும் சக்தி இல்லாவிட்டாலும். இதுவே உண்மை. மேலும் இங்கு நுழைபவர்கள் யாரும் வெறும் கையோடு வெளியே போவதில்லை. என் தந்தையின் பேரருள் அவர்கள் மீது பொழிந்த வண்ணம் இருக்கின்றது. தெய்வீக உணர்வு என்னவென்றே அறியாத பாமரர் கூட ஆசிரமத்தில் நுழைந்தவுடன் சட்டென்று தந்தையின் தெய்வீகத்தை உணரும்படியாக இந்த ஆசிரமத்தை என் தந்தை நிர்மாணித்துள்ளார்’’ என்பார். திருவண்ணாமலையில் அமைந்துள்ள யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஜீவ சமாதியை தரிசித்தாலேயே அவர் கூற்று உண்மை என்று புரியவரும்.