- · 5 friends
-
I

கர்வம் அழிந்தது - எழுத்தாளர் பாலகுமாரன்
என்னுடைய குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களால் என்னுடைய சிறிய கர்வம் ஒன்று மிக அழகாக எடுத்து வெளியே போடப்பட்டது .
எழுத்தாளன் என்ற கர்வத்தால் மனம் குதித்துக் கொண்டிருந்த நேரம் அது. நன்கு எழுதி பலபேர் பேரை வியக்க வைத்த காலம் அது. எதைப் பற்றி எழுதினாலும் மிகத் தெளிவாக எழுதுகிறேனே என்று கடிதங்கள் மூலமாகவும், நேராகவும் ஜனங்கள் என்னை அடையாளம் கொண்டு பாராட்டிய காலகட்டம் அது.
திருவண்ணாமலைக்கு வந்து என் குருவை சந்தித்து முதல் முறை புறக்கணிக்கப்பட்டு, இரண்டாம் முறை ஆரத்தழுவப் பட்டு 3, 4 , 5 முறைகள் பேசப்பேச என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, பல்வேறு விஷயங்களை எனக்கு பரிமாறி என் குருநாதர் வழி நடத்திக் கொண்டிருந்த காலம் அது.
எழுதுகிறோம் என்ற கர்வம் எனக்கு மட்டுமல்லாது, ஒரு நல்ல குருநாதரை அடைந்து விட்டோம் என்ற கர்வமும் எனக்கு ஏற்பட்டிருந்தது. அந்த குருநாதரும் மற்றவர்களை போல என்னை வரிசையில் நிற்க வைக்காது, உடனடியாக உள்ளே கூப்பிட்டு வலது கைப்பக்கம் அவருடைய பாயிலே இடம் கொடுக்கின்ற சந்தோஷம் திமிராக எனக்குள் பரவிக் கிடந்த நேரம் அது .
திருவண்ணாமலைக்கு ஒருமுறை வந்து குளித்து வேறு உடை உடுத்திக் கொண்டு, நெற்றியில் திருநீறு இட்டு, சிறிது அளவு சிற்றுண்டி சாப்பிட்டு, தங்கிய ஓட்டலில் இருந்து குரு இருக்கிற இடம் நோக்கி நடக்க போகும் வழியில் ஹோட்டல் நிலைக் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்க எனக்கு பரவசமாக இருந்தது.
"அடடே நம்முடைய முகம் மாறிப் போயிற்று. நம்முடைய தேஜஸ் வந்துவிட்டது. நம்முடைய வெள்ளை சட்டையும் விபூதியும், பெரிய கண்களும் நம்முடைய முகத்தை அழகாக இருக்கின்றன. இதைத்தவிர, வேறு ஏதோ அற்புத ஒளியும் சமுகத்தில் இருக்கிறது "என்று எனக்கு நானே ரசித்துக் கொண்டு , படி இறங்க திருவண்ணாமலையிலுள்ள வாசகர்கள் ஆவலோடு சுட்டிக்காட்டி ,நீங்கதானே சார் ? என்று கேட்டார்கள் ." ஆமாம் " என்று தலையசைக்க கையெழுத்து வாங்கினார்கள் கையெழுத்து போடும்போது கர்வம் எனக்கு கொப்பளித்தது .
எப்போதும் நான் குருவினுடைய வீட்டு வாசலுக்கு போனாலும் உடனே கதவு திறக்கும். என்னை கட்டிக் கொள்வதும் முதுகை தட்டிக் கொடுப்பதும் என்று பல்வேறு விதங்களில் பாராட்டுக்கள் அவரால் செய்யப்படும்.
நான் போன அந்த க்ஷணம் பெரிய சப்தத்துடன் ஒரு ' ஆஸ்ட்ரே ' யாராலோ கீழே போடப்பட்டு தரை முழுவதும் சாம்பலும், சிகரெட் தூளும் சிதறிக் கிடந்தா எதிரிகள் அதனை வாய் முழுவதும் பரவிக் கிடந்தன .யோகிராம்சுரத்குமார் போட்டவரே லேசாக கண்டித்து கொண்டு அந்த சாம்பலை கையால் வேகமாக அப்புறப்படுத்தினார். கதவை திற பாலகுமாரன் வரட்டும் என்று கட்டளையிட்டார். கதவு திறக்கப்பட்டது
வழக்கம்போல் அவருக்கு அருகே பாயை விரித்து உட்கார இடம் கொடுத்தார். ஆஷ்ட்ரே திறந்து சாம்பல் கொட்டிவிட்டது என்று என்னிடம் சொன்னார். நான் பார்த்தேன் என்று தலையசைத்தேன் .உடனே சந்தோஷமாக முதுகில் ஒரு தட்டு தட்டினார் கட்டிக்கொண்டார். வெள்ளை சட்டையில் இடது பக்கமும் வலது பக்கமும் அவர் கையிலிருந்த சாம்பல்கள் ஒட்டிக்கொண்டன.
'அடடே .. என்ன இது சாம்பலை உன் மீது வைத்துவிட்டேனே' என்று பதறி அந்த சாம்பலை துடைக்க முற்பட்டார். என் சட்டையை முழுவதும் இடது பக்கமும், வலது பக்கமும் கருப்பாயின .
'சே.. என்ன இந்த பிச்சைக்காரன் இப்படி செய்து கொண்டிருக்கிறான் என் சட்டையை நான் பாழ்படுத்தி விட்டேனே இரு.. இரு .. என்னைக் கையமர்த்தினார் . வாசற்கதவை மறுபடி திறக்க சொன்னார். வாசலில் சிரித்துக் கொண்டிருக்கிற மக்களை ஒவ்வொருவராக உள்ளே வரச்சொன்னார். அன்றைக்கு என்று எல்லார் கையிலும் மாலை இருந்தது .
ஒரு ஆள் உள்ளே நுழைந்தார். உள்ளே நுழைந்தவரிடம், " இவர் யார் தெரியுமா ? " என்று என்னைச் சுட்டிக்காட்டி கேட்டார் உள்ளே நுழைந்த ஆள் வாய் பொத்தி, " தெரியும் சாமி என்று சொன்னார்.
"யாரென்று சொல்ல ?"
பெரிய எழுத்தாளர் சாமி உங்களைப்பற்றியெல்லாம் கூட எழுதுறார் சாமி "
" அப்படியா.. இந்த மாலை யாருக்கு ? "
"உங்களுக்கு சாமி "
"வேண்டாம் அவருக்கு போடு" என்று என்னைக் காட்டினார்.
வந்த மனிதர் ஒரு சாமந்தி மாலை என் கழுத்தில் போட்டு என் காலில் நமஸ்காரம் செய்து விட்டுப் போனார். எனக்கு இலேசாக வயிற்றில் ஒரு கலவரம் ஏற்பட்டது .
வந்தவர் போக, அடுத்தவர் உள்ளே நுழைந்தார் அவரிடம் இருந்த கதம்ப மாலை , இவர்யார் தெரியுமா? என்று கேட்கப்பட்டு எனக்கு போடப்பட்டது.
மூன்றாமவர் வந்தார். இது துளசி மாலை.
" இவர் யார் தெரியுமா ? என்று மறுபடியும் கேள்வி கேட்கப்பட்டு ஒரு எழுத்தாளர் என்று சொல்லப்பட்டு ,அந்த மாலையை என் கழுத்தில் போடப்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக ரோஜா மாலை துளசிமாலை சாமந்தி மாலை என்று பலவகை என் கழுத்தில் விழுந்து ஏழு மாலைகள் என் காது வரை நிறைந்திருந்தன.
அவற்றை கலைய முற்படும்போது, கூடாது என்று அவர் தடுத்து விட்டார்.
எனது கழுத்திலிருந்து காதுவரை ஏழு மாலைகள் பல்வேறு வண்ணங்களில் என்மீது இருந்தன. வெயில் காலமாதலால் , உடம்பு வியர்வை சட்டையில் பட்டு ,சட்டையின் வியர்வை - மாலையில் உள்ள நூலில் பட்டு நூலிலிருந்து சாயம் போய் மஞ்சள் , நீலம் , சிகப்பு என்று வெள்ளை சட்டையில் பரவி ரேகைகள் ஆறாக ஓடிக் கொண்டிருந்தது.
'நான் குளித்து சட்டையையும் பார்த்துக் கொண்டேன் .எந்த வேளையில் இந்த சட்டையை வெள்ளையாக இருக்கிறது. என் முகம் தேஜஸாக இருக்கிறது என்று நினைத்தேனோ, உடனே தன் வெள்ளை சட்டையையும், என் முகத்தையும் என் குருநாதர் மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்துவிட்டது.
ஏழு மாலைகள் வெய்யில் நேரத்தில் கழுத்து, பிடரி, பின்னந்தலை என்று எல்லாவற்றிலும் குத்திக் கொண்டிருக்க, நான் அவஸ்தையோடு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
' வேறு எவரேனும் மாலை போட இருக்கிறார்களா ' என்று குரு கேட்க நல்லவேளை யாருமில்லை " சரி கிளம்புவோம்" என்று எழுந்தார் .
நான் மிக சந்தோஷத்தோடு மாலையை கழற்ற முற்பட்டபோது, "இல்லை இல்லை இந்த மாலைகளை நீ கழற்றக்கூடாது என்று சொல்லி கையை பிடித்து வெளியே அழைத்து வந்தார் .
என்னுடைய வலது கையில் அவருடைய விசிறியைக் கொடுத்தார். கொட்டாங்குச்சியை கொடுத்தார். இடது கையில் தன்னுடைய கோலைக் கொடுத்தார். உயரே தூக்கிப் பிடித்துக் கொள்ளச் சொன்னார் . உயரே இருந்த என் இடது கையை அவரும் பிடித்துக்கொண்டார் . தன் வீட்டு வாசலைப் பூட்டிக்கொண்டு, சாவியைப் பையில் போட்டுக் கொண்டு என் கையை பிடித்தபடி திருவண்ணாமலையை சுற்றி நடத்தத் துவங்கினார் .
கழுத்தில் ஏழு மாலைகள் வலது கையில் பனை விசிறி , கொட்டாங்குச்சி ,இடது கையில் கம்பு .கம்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற குருநாதர் யோகி ராம்சுரத்குமார் இடுப்பில் வழவழப்பான உயர் ரகமான வேட்டி. எனக்கு இப்படி கோமாளியாக இருப்பதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இடுப்பு வேட்டி 'எப்போது வேண்டுமானாலும் அவிழ்ந்துக் கீழே விழுவேன் 'என்று என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. எனக்கு அதைப் பற்றியே அதிகக் கவலையாயிருந்தது.
திருவண்ணாமலையில் யாருக்கெல்லாம் கையெழுத்துப் போட்டேனோ . எவரெல்லாம் என்னை பார்த்து கைகூப்பினார்ககளோ அவர்களெல்லாம் மீண்டும் என்னை பார்க்கும்படி ஊர்வலமாக அழைத்து கொண்டு போனார்.
அவர்கள் தொலைவிலிருந்து என்னைப் பார்த்து கைநீட்டி மறுபடியும் பேசினார்கள். முன்பு அவர்கள் பேசியபோது பாராட்டுவது போல் தெரிந்தது .இப்போது அவர்கள் கை நீட்டி பேசுவது கேலி செய்வது போல் தோன்றியது.
" கடவுளை நான் இனிமேல் திருவண்ணாமலைக்கு வந்து பெரிய எழுத்தாளன் என்று அலட்டிக்கொள்ள மாட்டேன். தயவு செய்து என் இடுப்பு வேட்டியை அடுத்து விடாதீர்கள் என்று மனதுக்குள் கெஞ்சினேன் . மாலையோடு போனாலும் பரவாயில்லை, விசிறியோடு போனாலும் பரவாயில்லை, இரண்டு கைகளையும் உயரே தூக்கிக்கொண்டு உடம்பெல்லாம் சாயம் வழியே நடந்தாலும் பரவாயில்லை, இடுப்பு வேட்டி இல்லாமல் ஒருவன் எப்படி நடந்து போவது வெறும் சட்டையும் ஜட்டியுமா ஒரு எழுத்தாளன் எப்படி திருவண்ணாமலை தெருவில் நடந்து போவது மனம் தவியாய் தவித்தது.
மறுபடி மறுபடி குருநாதரை வேண்டிக்கொண்டேன் நல்லவேளை திருவண்ணாமலை சுற்றி அவர் இடத்திற்கு வரும் வரை வேட்டி அவிழவே இல்லை அவர் இடத்திற்கு வந்து அவரை நமஸ்கரித்து நிமிர்ந்தபோது சரக்கென்று வேட்டி சரிந்தது. என் கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டேன். எனக்கு புரிந்தது பகவான் என்று கைகூப்பினேன் .' இட்ஸ் ஆல் ஓவர் , என்று பகவான் என்னை கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்.
அன்று முதல் இன்று வரை குரு என்றால் எவ்வளவு அடக்கமாக இருக்க வேண்டும். எத்தனை அமைதியாக இருக்க வேண்டும். எவ்வளவு உண்மையாக இருக்க வேண்டும். என்று தெள்ளத் தெளிவா தெரிந்தது போயிற்று. இந்த நிலையிலிருந்து இன்று வரை நான் நெல்முனையளவும் மாறவில்லை .
இப்பொழுதும் திருவண்ணாமலை என்று சொன்னாலே மனம் கைகூப்பும், குருவின் பெயரைச் சொன்னாலே சாஷ்டாங்கமாய் உள்ளுக்குள் ஒரு நமஸ்காரம் ஏற்படும் .
குரு என்பது பயமுறுத்தல் அல்ல. குரு என்பது ஒரு அன்பின் பிணைப்பு, உரிமைச், சங்கிலி நம் குறையை கலைந்து எடுத்து வெளியே போடும் ஞானக்தந்தை. அன்பு ஆசான் , உற்ற சினேகிதன், இளைப்பாற விசிறி விடும் தாய். அடிமனதில் இருந்து குரல் கொடுத்தால் போதும் எல்லா வேதனையிலிருந்தும் மீட்க ஓடி வரும் தெய்வம் .
-குரு வழி - பாலகுமாரன்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·