Feed Item
Added a news 

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

 

நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார்.

அவர் அங்குள்ள ஆண்ட்ரூ விமானப்படை தளத்தில் தரை இறங்கினார். அவரை அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு துணைச்செயலாளர், இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்பட அதிகார வர்க்கத்தினர் வரவேற்றனர்.

 

மோடி அங்கு சென்று இறங்கியபோது மழைச்சாரல் வீசிக்கொண்டிருந்தது. அதற்கு மத்தியிலும் மூவர்ணக்கொடியை ஏந்திக்கொண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.  பிரதமர் மோடியுடன் கை குலுக்க அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கைகளை நீட்டினர். மோடி அவர்கள் அருகில் சென்று கை குலுக்கியதுடன், படமும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

பிரதமர் மோடி அமெரிக்காவில் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை தொடங்கினார்.  அமெரிக்காவை சேர்ந்த ஐந்து உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அடோப் நிறுவன தலைவர் சாந்தனு நாராயன், ஜெனரல் ஆட்டோமிக்ஸ் நிறுவன தலைவர் விவேக் லால், குவால்கம் தலைவர் கிறிஸ்டியானோ அமோன், பர்ஸ்ட் சோலார் தலைவர் மார்க் விட்மர், பிளாக்ஸ்டோன்  தலைவர் சூவர்ஸ்மான் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

 

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இந்திய நேரப்படி அதிகாலை 12.45 மணிக்கு சந்தித்துப்பேசினார். அப்போது பேசிய மோடி, சிறப்பான வரவேற்பளித்ததற்கு கமலாஹாரிசுக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா இரண்டாவது அலையின் துவக்கத்தில் இந்தியாவுக்கு உதவியதற்காக அமெரிக்காவுக்கு நன்றி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

 

அமெரிக்க அதிபர் பைடன்-கமலா ஹாரிசின் தலைமையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் புதிய உயரங்களை தொடும் என்றும் மோடி குறிப்பிட்டார். மேலும் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் இந்தியா வரவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் மிகமுக்கிய பங்காளராக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார். 

 

கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தில் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதில் இந்தியா மிகமுக்கிய பங்காற்றியதாக கமலா ஹாரிஸ் நினைவு கூர்ந்தார். இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள கமலா ஹாரிஸ், இந்தியாவில் தினசரி 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவது வியப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் கண்டுபிடிப்பில் எவ்வாறு பங்களிப்பை அதிகரிப்பது என்பது தொடர்பாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.

 

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குவாட் உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

  • 601