Feed Item
Added article 

இந்தி மொழியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர், சாராபாய் vs.சாராபாய். இந்த தொடர் 2011ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

இந்த தொடரில் ஜாஸ்மினாக நடித்து பலரையும் கவர்ந்தவர் வைபவி உபாத்யாய். அந்த தொடர் மூலம் கிடைத்த புகழால் இவர் பல பிரபலமான தொடர்களிலும் நடித்தார். சீரியல் மட்டும் இல்லாமல் இவர், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சபக் படத்தில், மீனாட்சி என்ற முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார்.

இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதனிடையே நேற்று (மே 23) வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்தது. இதில் வைபவி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வைபவியின் குடும்பத்தினர் தற்போது அவரது உடலை மும்பைக்கு கொண்டு சென்று அவரது இறுதிச் சடங்குகளை நடத்துகின்றனர். வைபவியின் மறைவுக்கு அவருடன் நடித்த சக நடிகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வைபவி தனது இன்ஸ்டா பக்கத்தில் மே 6 ஆம் தேதியன்று ஒரு ரீல்ஸ் வீடியோவினை வெளியிட்டார். அதில், அவர் கடந்த ஆண்டு பயணம் மேற்கொண்ட போது எடுத்த சிறு சிறு வீடியோக்களின் தொகுப்பு இருந்தது. இதை பகிர்ந்த அவர், இயற்கை குறித்தும் அது நம் உடல் நலனில் ஏற்படுத்தும் நலன்கள் குறித்தும் சிறிய குறிப்பினை எழுதி இருந்தார். அத்துடன், “நமக்கு கிடைக்கும் அனைத்து பரிசுகளையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்” என்றார்.

  • 347