·   ·  1983 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

திருமூலர் பெருமான் சொன்ன ஓரெழுத்து மந்திரம்

திருமூலர் பெருமான் சொன்ன ஓரெழுத்து மந்திரம் என்றால் என்ன....?

ஒரேழுத்து மந்திரம்...!

ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?... பலர் என்னிடம் அந்த ரகசியத்தை கேட்டார்கள். அதனாலேதான் இந்த பதிவு... இன்று நம் சித்தர்களின் குரலில்....

"நமச்சிவாய வாழ்க; நாதன்தாள் வாழ்க" என்று தொடங்கும் திருவாசகம்,

"நமச்சிவாயத்தை" நாதன் தாளுக்கும் முன்பாக முதன்மைப்படுத்தித் தொடக்கச் சொல்லாக வைத்துக்கொள்கிறது.

"நமச்சிவாய" என்பது பஞ்சாக்கரம் என்று சொல்லப்படும் ஐந்தெழுத்து. மாணிக்கவாசகர் தமிழ் மரபுப்படி எழுதிய நமச்சிவாயத்தில் ஆறெழுத்து வருகிறதே என்றால்,

"நம"வுக்கும் "சிவாய"வுக்கும் இடையில் சந்தியாக வந்து அரை மாத்திரையளவு ஒலிக்கும் "இச்சன்னா" கணக்கில் வராது;

ஆகவே ஐந்தெழுத்துத்தான்....

ஐந்தெழுத்து ஓதுதல் என்பது,

வலுவாக ஆதரிக்கப்பட்ட சைவ மரபுகளில் ஒன்று. இந்த மரபு திருமூலர் காலத்திலிருந்துதான் தொடங்குகிறது.

தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும்

"நமச்சிவாய" என்றோ "சிவாயநம" என்றோ, எந்த வடிவத்திலும் ஐந்தெழுத்து இடம்பெறவில்லை என்பது இருக்க, முதல் நாயன்மார்களில் ஒருவர் என்றும் திருமூலருக்கு முந்தையவர் என்றும் கருதப்படுகிற காரைக்கால் அம்மையார் பாடல்களில்கூட ஐந்தெழுத்து இடம்பெறவில்லை.

ஐந்தெழுத்தை முன்னிறுத்தும் முதல் சித்தர் என் குருநாதர் திருமூலர்தான்.

அவருக்குப் பின் வந்தவர்களெல்லாம் அவரை வழிமொழிந்து, ஐந்தெழுத்தை மரபாக்கி விட்டார்கள்.....

கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கிக்

கரணங்கள் விட்டுஉயிர் தான்எழும்போதும்,

மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும்போதும்,

அரணம்கை கூட்டுவது அஞ்சுஎழுத்து ஆமே.

திருமந்திரம் 2702

ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என்று ஒளிக்கு ஏழு கதிர்கள். கருவிகள் எல்லாம் கைவிட்டுச் சாகப்போகும் நிலையில், அணையும் விளக்கில் எழும் ஒளிபோல, உடம்பில் எழுகதிர் ஒளிவீச, உயிர் எழும்.

சாவு நம் சட்டையைப் பிடித்து உயிரை உருவப் போகும் நிலையிலும்கூட அரணாய் நின்று பாதுகாப்புத் தருவது ஐந்தெழுத்து மட்டுந்தான் என்று திருமூலர் புகழ,

"நற்றுணையாவது நமச்சிவாயவே"

என்று அப்பர் நமச்சிவாயப் பதிகம் பாட......

#துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,

நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்;

வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த, வந்த கூற்று

அஞ்சஉ தைத்தன அஞ்சு எழுத்துமே

- தேவாரம், 3:22:1

என்று பஞ்சாட்சரத் திருப்பதிகம் பாடுகிறார் திருஞான சம்பந்தர்.....

தூங்கும்போதும், தூங்காமல் விழித்திருக்கும்போதும், நெஞ்சம் நைந்துபோகுமாறு நாளும்நாள் இடைவிடாது நினையுங்கள்.

எதை? ஐந்தெழுத்தைக் கொண்டு வாழ்த்தியதால் மார்க்கண்டேயனின் உயிர் பிரிக்க வந்த கூற்றுவனுக்கு உதை விழுந்ததே,

ஐந்தெழுத்தின் ஐந்து வகை

--------------------------------------------------

இவ்வாறாக ஐந்தெழுத்து தமிழ் மரபில் ஊன்றிக்கொண்டது என்பதிருக்க, ஐந்தெழுத்தை அஞ்சாக வகை பிரிக்கிறார்கள்:

(1) பரு ஐந்தெழுத்து (தூல பஞ்சாக்கரம்),

(2) நுண் ஐந்தெழுத்து (சூக்கும பஞ்சாக்கரம்),

(3) மீநுண் ஐந்தெழுத்து (அதிசூக்கும பஞ்சாக்கரம்),

(4) காரண ஐந்தெழுத்து (காரண பஞ்சாக்கரம்),

(5) பெருங்காரண ஐந்தெழுத்து (மகாகாரண பஞ்சாக்கரம்).

எழுத்தோடு சொல்வதென்றால்,

"ந-ம-சி-வா-ய" என்பது பரு ஐந்தெழுத்து;

"சி-வா-ய-ந-ம" என்பது நுண் ஐந்தெழுத்து,

"சி-வா-ய" என்பது மீநுண் ஐந்தெழுத்து,

"சி-வ" என்பது காரண ஐந்தெழுத்து,

"சி" என்பது பெருங்காரண ஐந்தெழுத்து.

இந்த ஐந்தெழுத்துக்களும் எவற்றைக் குறித்து நிற்கின்றன என்பதையும் திருமூலரே விளக்குகிறார்:

சிவன், சத்தி, சீவன், செறுமலம், மாயை,

அவம்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்

சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர,

அவஞ்சேர்த்த பாசம் அணுககி லாவே.

- திருமந்திரம் 2710

"சி" சிவனையும்,

"வா" சத்தியாகிய அருளையும்,

"ய" உயிரையும்,

"ந"அறியாமையாகிய ஆணவத்தையும்,

"ம" மலங்களாகிய மாயை முதலிய அழுக்குகளையும் குறிக்கும்.

சி-வா-ய-ந-ம என்னும் ஐந்தெழுத்தில்,

"ய" என்னும் உயிர்,

"சி,வா" என்னும் சிவன்-அருள் ஆகியவற்றுக்கும்,

"ந,ம"என்னும் ஆணவம்-மலங்கள் ஆகியவற்றுக்கும் இடையில்,

சிவன்-அருள்-உயிர்-ஆணவம்-மலங்கள் என்ற வரிசையில் நிற்கிறது.

அதாவது சார்ந்து நிற்கத் தகுந்த பொருளுக்கும், சார்ந்து நிற்கத் தகாத பொருளுக்கும் இடையில் நிற்கிறது.

இந்தப் பக்கம் சாய்ந்தாலும் சாயலாம்;

அந்தப் பக்கம் சாய்ந்தாலும் சாயலாம்.

இந்தப் பக்கம் சாய்ந்தால் சிவனருள்;

அந்தப் பக்கம் சாய்ந்தால் பிறவிப் பெருங்கடல்.

தவித்து நிற்கும் உயிர் தகுந்த கட்சியில் சேர்ந்தால் வம்பு வழக்குகள் வாரா.....

மொத்தத்தில் நமக்கு

"சி-வா-ய-ந-ம" சிறந்தது.

"ந-ம-சி-வா-ய" வுக்கும் "சி-வா-ய-ந-ம" வுக்கும் என்ன வேறுபாடு?

"ந-ம-சி-வா-ய" என்னும் பரு ஐந்தெழுத்து, மலங்களை முன்னால் வைத்துச் சிவனையும் அருளையும் இடையில் வைத்து உயிரைக் கடைசிக்குத் தள்ளிவிடுகிறது.

"சி-வா-ய-ந-ம" என்னும் நுண் ஐந்தெழுத்தோ, சிவனையும் அருளையும் முன்னால் வைத்து, உயிரை நடுவில் வைத்து, மலங்களைக் கடைசிக்குத் தள்ளிவிடுகிறது.

ஆகவே "ந-ம-சி-வா-ய"என்னும்,

பரு ஐந்தெழுத்தைக் காட்டிலும்

"சி-வா-ய-ந-ம" என்னும் நுண் ஐந்தெழுத்தே சிறந்தது.

"சி-வா-ய-ந-ம" என்றும் நுண் ஐந்தெழுத்தை விடவும் "சி-வா-ய" என்னும் மீநுண் ஐந்தெழுத்துச் சிறப்பு ஏன்?

அது "ந-ம" என்னும் மலங்களை முற்றிலுமாகக் கழித்துக் கட்டிவிடுகிறது.

இப்போது இருப்பது சிவனும் அருளும் உயிரும்தான்.

"சி-வா-ய" என்னும் மீநுண் ஐந்தெழுத்தைக் காட்டிலும் "சி-வ" என்னும் காரண ஐந்தெழுத்து இன்னும் சிறப்பு ஏன்?

உயிர் தன்னை மறந்து அருளுக்குள் ஒடுங்கிவிட்டது என்பதால்.

"சி-வ" என்னும் காரண ஐந்தெழுத்தைவிட, "சி" என்னும் பெருங்காரண ஐந்தெழுத்தே உச்சம் ஏன்?

உயிர் தானற்றுப்போய்ச் சிவன்மட்டுமே நிற்றலால்.

இந்த மந்திரத்தை

"பேசாத மந்திரம்",

"ஊமை எழுத்து",

"நெஞ்செழுத்து",

"மௌன அட்சரம்",

"நாயோட்டு மந்திரம்"

என பல பெயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்....

கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்..

"ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்க்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி"

"சி" என்னும் இந்தப் பெருங்காரண ஐந்தெழுத்தை "நாயோட்டு மந்திரம்" என்கிறார் திருமூலர்.

அதென்ன நாயோட்டு மந்திரம்?

தெருவில் போகையில் வாலைக் குழைத்து வரும் நாயை எப்படி ஓட்டுவீர்கள்?

"சி" என்றுதானே?

நாய்ஓட்டும் மந்திரம் நான்மறை நால்வேதம்;

நாய்ஓட்டும் மந்திரம் நாதன் இருப்பிடம்;

நாய்ஓட்டும் மந்திரம் நாதஅந்தம் ஆம்சோதி;

நாய்ஓட்டும் மந்திரம் நாம்அறி யோமே.

- திருமந்திரம், 3051

நால்வேதப் பொருள் என்கிறார்கள்.

என்ன பெரிய நால்வேதப் பொருள்?

எல்லாம் வெறும் நாயோட்டும் மந்திரந்தான். இறைவன் இருப்பதே நாயோட்டும் மந்திரத்தில்தான்.

"சி" என்னும் நாயோட்டும் மந்திரம் வேத மந்திரங்களைப்போல வாய் திறந்து எழுப்பும் ஒலிக்குறிப்பன்று;

அது எல்லா ஒலிகளும் முடியுமிடம்.

நாளும் நம்மில் இயங்கிக்கொண்டிருக்கும் அதை அறிந்தோமா நாம்?

"சி" நாளும் நம்மில் இயங்குகிறதா?எங்கே? நம் வாங்கிவிடும் மூச்சாக.

மூச்சின் ஒலியான "சி" வாய் திறந்து பேசாத மந்திரம்; ஊமை எழுத்து; நெஞ்செழுத்து.

சிவவாக்கியர் இந்த மந்திரத்தினை இப்படி குறிப்பிடுகிறார்...

அஞ்சுஎழுத்தி லேபிறந்து, அஞ்சுஎழுத்தி லேவளர்ந்து,

அஞ்சுஎழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்!

அஞ்சுஎழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லிரேல்

அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!

- சிவவாக்கியர், யோகநிலை 20

என்று பாடுகிறார் சிவவாக்கியர்....

அஞ்சு மலங்களின் காரணமாக, அஞ்சு பூதங்களால் பிறந்து, அஞ்சு புலன்களில் வளர்ந்து, ஐந்தெழுத்தை ஓதுகின்ற அறியாதவர்களே! ஐந்தெழுத்தில் "சி" என்னும் ஓர் எழுத்தை, அதாவது மூச்சை,

அதன் பயனை அறிந்து ஓதியிருந்தால்,

"அஞ்சாதே" என்று "அம்பலத்தான்"

வந்து ஆடியிருக்க மாட்டானா?

மற்றொரு பாடலில் சிவவாக்கியர் பின்வருமாறு விளக்குகிறார்.....

அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?

உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?

அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?

விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?

வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார்.....

"ஒரேழுத் தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே - அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே"

அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார்.......

"எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே

எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்லை

ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே

அறிந்தொமேன்பர் மௌனத்தை அவனை நீயும்

வேகாச் சாகாத தலை கால் விரைந்து கேளாய்

விடுத்த அதனை உரைப்பவனே ஆசானாகும்

தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி

திருநடனம் காண முத்தி சித்தியாமே!"

இத்தனை மகத்துவம் வாய்ந்த அந்த ஓரெழுத்து மந்திரம்தான் என்ன?

பிரணவ மந்திரமான "ஓம்" காரத்தில் இந்த ஓரெழுத்து மந்திரம் ஊமை எழுத்தாக உள்ளது என்கிறார் கொங்கணவர்.....

சிவவாக்கியரோ

"அஞ்செழுத்தில் ஒரேழுத்து"

என குறிப்பு தருகிறார். அதாவது ந-ம-சி-வ-ய என்கிற ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து என்கிறார்.

திருமூலரோ *”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்”* என்கிறார். அது சரி!, நாயை எப்படி விரட்டுகிறோம்.....!

"ச்சீய்"....!

ஆம்!, இத்தனை மறைவாக சித்தர்கள் குறிப்பிட்ட அந்த ஓரெழுத்து மந்திரம் "சி" என்பதாகும். இதனை "சி" காரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஓம் என்கிற ஓங்காரத்தில் இந்த "சி" ஊமை எழுத்தாய் இருக்கிறது என கொங்கணவர் ஏன் சொன்னார்?

இதற்கான விளக்கம் பின்வரும் சிவவாக்கியர் பாடலில் கிடைக்கிறது.

அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?

உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?

அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?

விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?

அகாரமாகிய "அ"வ்வும்,

உகாரமாகிய "உ"வ்வும்

சிகாரமாகிய "சி"வ்வும்

இல்லாமல் இணைய முடியாது. இது எப்படி என்பதை யோகி ஒருவரே உபதேசிக்க வேண்டும் என்கிறார். இந்த ரகசியம் காலம் காலமாய் குருமுகமாவே வழங்கப் படுகிறது. இதனையே குரு உபதேசம் செய்கிறார்.

பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே;

விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வார்இல்லை;

எழுத்துஅறி வோம்என்று உரைப்பர்கள் ஏதர்;

எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே.

- திருமந்திரம் 2721

என்று திருமூலர் முத்தாய்ப்பு வைக்கிறார். நீங்கள் பொருள் தேட வேண்டிய பழமறை நீங்கள்தான்.

ஐந்தெழுத்தின் மிகுமீநுண்வடிவம்

"சி" என்னும் எழுத்தாக, உயிர்வாழ்வின் பெருங்காரணமாகப் பழுத்துக் கிடப்பதும் உங்களுக்குள்ளேதான்.

அந்தப் பழத்தைப் பறித்து உண்ணாமல் உறங்கலாமா? உறங்கும்போதுகூட ஒழுங்காக இயங்குமாறு மூச்சைப் பயிற்ற வேண்டாமா? "தூங்கையிலே வாங்கிவிடும் மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சு" இல்லையா? எங்களுக்குத் தெரியாத ஐந்தெழுத்தா என்று பேசுகிறவர்களே!

தலையெழுத்தை அழுத்தி மாற்றும் மூச்செழுத்தை அறிவீர்களா? "சி"

  • 513
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங