·   ·  228 posts
  • 2 members
  • 2 friends

கணநாதர் ரகசியம்

'சிதம்பர ரகசியம்' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

நடராஜர் சன்னிதியில், மறைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைப் பற்றிய விளக்கமே இது.

இந்த மறைவுப் பகுதி வழியாக பார்த்தால், வானமே எல்லையாகத் தோன்றும். இறைவன் எல்லையற்றவன்,

புரிந்து கொள்ள முடியாதவன் என்பதற்காக, அமைக்கப்பட்ட சன்னிதி இது.

இதுபோல், 'கணநாதர் ரகசியம்' என்ற அமைப்பை, தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் காணலாம்.

சமீபகாலமாக, ராகு கோவில் என, இது பிரசித்தி பெற்றுள்ளது.

இந்தக் கோவிலின் நுழைவு வாசலில், கொடி மரத்தை ஒட்டி, கணநாதர் ரகசியம் என, பெயரிடப்பட்ட சன்னிதி உள்ளது.

பொதுவாக, சிவாலயங்களில் நுழைவு வாயிலின் இடதுபுறம் விநாயகர் சன்னிதி இருக்கும். இங்கே, விநாயகரின் இன்னொரு பெயரான கணநாதரின் பெயரில் சன்னிதி இருக்கிறது. இதன் வரலாறு அதிசயிக்கத்தக்கதாக உள்ளது.

பகவான் பெரியவனா, பக்தன் பெரியவனா என்ற கேள்வியை ஆன்மிகத்தில் எழுப்புவதுண்டு.

தன்னை விட பக்தனே பெரியவன் என, நமக்கு விட்டுத் தருகிறான், ஆண்டவன். இந்த தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது தான், இந்த சன்னிதி.

ஒரு காலத்தில், இந்த கோவிலுக்குள் யாரும் நுழைய முடியாத நிலை இருந்தது. உள்ளே செல்ல முயன்ற பக்தர்கள், கீழே விழுந்து காயமடைந்தனர். இதற்கான காரணம் தெரியாமல் தவித்தனர்.

கேரள நம்பூதிரிகளை அழைத்து வந்து, பிரசன்னம் (கோவில் தொடர்பான ஜோதிடம்) பார்த்த போது, கோவிலுக்குள் தீய சக்திகள் புகுந்துள்ளதும், பக்தர்களை உள்ளே வர விடாமல் தொல்லை செய்ததும் தெரிய வந்தது.

அப்போது, நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மகான், அவ்வூருக்கு வந்தார். இவர், கும்பகோணம் அருகிலுள்ள திருவிசநல்லுாரில் பிறந்தவர். கரூர் அருகிலுள்ள நெரூரில் சமாதியானார். இதனால், நெரூர் மகான் என, அழைக்கப்பட்டார்.

அவரிடம் பக்தர்கள் கோவிலின் நிலையை எடுத்துக் கூறினர். அவர் கோவிலுக்குள் வந்து, சிவ கணங்களுக்கு தலைவராக விளங்கும் விநாயகரையும், ஒரு யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்தார். ஆனால், இவை யார் கண்களுக்கும் தெரியாது. சன்னிதிக்குள் ஒரு விளக்கு ஏற்றப்பட்டது. உடனே, உள்ளே இருந்த தீய சக்திகளை நோக்கி, தீ ஜுவாலைகள் பாய்ந்தன. அவை, அலறியடித்து வெளியேறின.

சமீபகாலமாக, ராகு தோஷ நிவர்த்திக்காக, மக்கள் இங்கு வருகின்றனர். இவர்கள், கணநாதர் சன்னிதியை வழிபட்டாலே போதும். சகல தோஷமும் நீங்கி விடும்.

கும்பகோணத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் திருநாகேஸ்வரம் உள்ளது.

  • 820
  • More
Comments (0)
Login or Join to comment.