Feed Item
Added a news 

இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட நிலையில், மாகாண சபை, பாராளுமன்ற தேர்தல் முறைகளை கலப்பு முறைக்கு மாற்றி, சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களையும் ஒழித்து, மாகாண சபை, பாராளுமன்ற மக்கள் மன்றங்களை மேலும் பலவீனமாக்கி நாட்டை சர்வாதிகார போக்கில் மென்மேலும் கொண்டு செல்ல ஒருபோதும் இணங்கவோ, இடமளிக்கவோ முடியாது. இந்த வரலாற்று தவறு உங்கள் தலைமையில் ஏற்பட்டது என்ற பழிச்சொல் உங்கள் மீது விழாமல் தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கவனமாக செயற்பட வேண்டும் என இன்று தேர்தல் முறைமை சீர்த்திருத்த தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேர்தல் முறைமை சீர்த்திருத்த தெரிவுக்குழு பாராளுமன்ற வளாகத்தில் இன்று தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடியபோது, தமுகூ தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வி. ராதாகிருஷ்ணன், எம்பீக்கள் வேலு குமார், உதயகுமார் ஆகியோர் அடங்கிய கூட்டணி தூதுக்குழுவினர் சமூகமளித்தனர். அதன்போது கூட்டணியின் நிலைப்பாடுகளை எடுத்துக்கூறிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த தேர்தல் முறை மாற்றம் எமது ஆட்சிகாலத்தில் கலப்பு முறைக்கு பரீட்சார்த்தமாக மாற்றப்பட்டது. ஆனால், அந்த மாற்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நிலையான ஆட்சிக்கு வழி காட்டவில்லை. அத்துடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடெங்கும் ஏறக்குறைய அறுபது முதல் எழுபது விகிதம் அதிகரித்தது. ஆனாலும், குழப்ப நிலைமையே ஏற்பட்டது.

இந்நிலையில், இதே விதமான குழப்ப நிலைமையை மாகாணசபை, பாராளுமன்றங்களிலும் ஏற்படுத்தி இந்நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க வேண்டாம். எமக்கு முன் சாட்சியம் அளித்த ஒரு இன்னொரு கட்சியின் பிரதிநிதி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைத்தால், அவர்கள் கடந்த காலங்களை போல் வேறு வழி இல்லாமல், ஆயுதம் தூக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என எச்சரித்தார்.

  • 498