இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு காலமானார்
இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 101வது வயதில் சென்னையில் காலமானார். 80 ஆண்டு கால அரசியல் போராட்ட வரலாறு கொண்ட தோழர் நல்லகண்ணு கடைசிவரை மீசை வைத்துக் கொள்ளவில்லை. அந்த மீசைக்கு பின்னால் மனதை உலுக்க வைக்கும் ஒரு பின்னணி உள்ளது பலருக்கும் தெரியாது,
சுதந்திரப் போராட்ட போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தோழர் நல்லகண்ணு. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925 இல் பிறந்த இவர் மாணவப் பருவத்தில் இருந்தே சுதந்திர தாகம் கொண்டவர்.
18 வயதிலேயே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்தவர். 1949 இல் நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர்.
1949 முதல் நெல்லை பாளையங்கோட்டை, வேலூர் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டவர். கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கத்திற்கு பிறகு அவர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விடுதலையானார். தொடர்ந்து அரசியல் வாதியாக மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்தவர். தமிழக முழுவதும் அவர் கால்படாத இடங்களை இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு அவரது கால்கள் தமிழகம் முழுவதும் பயணப்பட்டது.
இறுதி மூச்சு வரை எளிய மக்களுக்காக குரல் கொடுத்தவர் நல்லகண்ணு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து உடல் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது தளர்வு காரணமாக அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கியது.
25.02.2026 நண்பகல் 1.55 மணிக்கு நல்லகண்ணு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் தங்கள் கண்ணீர் அஞ்சலியை நல்ல கண்ணுவுக்கு செலுத்தி வருகின்றனர். மீசையில்லாத நல்லக்கண்ணுவைத்தான் நாம் அதிகம் பார்த்திருப்போம். அதற்கு பின்னர் ஒரு கொடூர மனதை உருக்கும் பின்னணி உள்ளது. நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது மிகப் பெரிய மீசை வைத்திருந்தாராம். அப்போது காவல் அதிகாரிகள் அவரது கூட்டாளிகள் குறித்து விசாரித்து ஒவ்வொரு மீசை முடியையும் கையாலேயே பிடிங்கி எடுத்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை தான் மீசை வளர்க்கப்போவதில்லை என்று முடிவெடுத்த நல்ல கண்ணு கடைசிவரை மீசை வளர்க்கவில்லை என்பது தான் மனதை உருக்கும் சோகம்.