
அம்மா உணவகங்களில் இலவச உணவு
கனமழை எதிரொலியாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று ஒரு நாள் முழுவதும் உணவு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மழையும் காற்றும் பின்னி பெடலெடுக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. பலத்த காற்றும் வீசி வருவதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் பேரிக்கார்டுகளும், சிக்னல் கம்பங்களும் சேதமடைந்துள்ளன.
சென்னையில் பெய்து கனமழையால் மழைநீர் சாலையில் தேங்கி வேலைக்கு செல்பவர்கள் முதல் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வரை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஓட்டல்கள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று ஒரு நாள் முழுவதும் உணவு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு மிகவும் மலிவு விலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. இதனால் பலர் பயனடைந்து வந்ததால் அதையடுத்து வந்த திமுக அரசு அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்தான் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.