Feed Item
Added a news 

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 11 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகல்லாறு 2ஆம் குறிச்சி, நாவலர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து (10) சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தொழிலுக்காக சென்றுள்ள நிலையில் இந்தச் சிறுமி தனது சிறிய தாயின் வீட்டிலேயே இருந்துவந்துள்ளார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் இச் சிறுமியின் அம்மம்மாவின் வீட்டிலிருந்தபோது தாக்கப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிராம சேவகரினால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் சனிக்கிழமை வைத்தியசாலையிலிருந்த சிறுமியை அவரது சிறிய தாயார் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றுக் காலை சிறிய தாயின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சிறுமிக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • 1083