Feed Item
Added a news 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிரான வழக்கினை சட்டமா அதிபர் இன்று (11) திங்கட்கிழமை வாபஸ் பெற்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் கடந்த பல வருடங்காள தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று மீண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சட்டத்தரணிகள், குறித்த வழக்கினை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றித்தினால் தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வாவின் வழிகாட்டலில் சட்டத்தரணிகளான ரசிக பாலசூரிய, அசித சிரிவர்த்தன, மங்களேஸ்வரி சங்கர் மற்றும் சிபான் மஹ்ரூப் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணிகளான மாதவ தென்னகோன் மற்றும் ஷிகான் முஸ்தபா ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 1336