Feed Item
Added a news 

நாட்டில் முதன்முறையாக கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ஜிகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதால் அங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  தமிழகத்திலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கேரள, தமிழக எல்லையில் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

 

கோவை மக்களுக்கு ஜிகா வைரஸ் பரவல் குறித்தும் கொசுக்கள் மூலம் வைரஸ் பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், டெல்டா, டெல்டா பிளஸ், ஜிகா என புது வைரஸ்கள் உருவாகின்றன. ஜிகா வைரசால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் நிலை உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

ஏடிஸ் கொசுக்கள் மூலமாக வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார். தமிழகத்தில் ஜிகா பாதிப்பு இல்லை என்றும் எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது என்றும் இதுவரை 2,500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ஜிகா வைரஸ் என்பது கொசுவால் பரவக்கூடிய பிளவி வைரஸ். இது முதன் முதலில் உகாண்டாவில் உள்ள குரங்குகளுக்கு கடந்த 1947ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்த ஜிகா வைரசானது 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஜிகா வைரஸ் அறிகுறிகள் அற்று இருந்தாலும், இது சிலருக்கு காய்ச்சல், தலைவலி, அரிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டுவலிகளை ஏற்படுத்தும் என்றும் இவை அனைத்தும் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை காணப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

  • 927