Feed Item
Added a news 

யாழ் மாநகரப் பகுதிகளுக்குள் வெற்றிலை உமிழ்ந்து எச்சிலைத் துப்பினால் 2000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பிலே அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ் மாநகர சபைக்குள்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகள், வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கு மாநகர காவல் படை எனும் பெயரில் 05 உத்தியோகத்தர்களைக் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்கள், யாழ் மாநகரின் தூய்மையை பாதுகாக்கும் வகையில் வீதிகளில் குப்பை போடுபவர்கள், வீதிகள், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்ந்துவிட்டு எச்சில் துப்புபவர்கள், தூய்மையை சரிவரப் பேணாதவர்கள் என அடையாளம் காணப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி வீதிப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகள் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்க்கு பொதுமக்கள் போதுமான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.

மேலும் சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது தண்டப்பணம் அறவிடும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் வீதி மற்றும் பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் 2000ரூபாவும், மீண்டும் மீண்டும் தவறிழைத்தால் 4000 ரூபா வரையும் தண்டம் அறவிடப்படும்.

மேலும் வீதிகள் பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு 5000ரூபாவும் மீண்டும் மீண்டும் செய்தால் 10000ரூபா தண்டமும், அத்துடன் பொது இடங்களில் மலசலங்களைக் கழிப்பவர்கள் மேல் 5000ரூபாவும் மீண்டும் மீண்டும் செய்தால் 10000 ரூபாவும் தண்டமாக அறவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை நாளைமுதல் செயற்படுத்தப்படும் எனவும் மக்கள், வர்த்தகர்கள் அதற்கு ஏற்றவகையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • 321