Feed Item
Added a post 
80 வயது முடிந்தது அந்த தம்பதியருக்கு சதாபிஷேகம்.  வெகு விமரிசையாக. சுற்றமும் நட்பும் அந்த தம்பதியருக்கு புடவை வேஷ்டி என்று எடுத்து சபையில் அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர். தடபுடலாக நடந்து முடிந்தது.  மறுநாள் காலையில் அந்த பெரியவர் அருகில் உள்ள கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு எதிரில் உள்ள அரச மரத்தினடியில் அமர்ந்தார்.
 அப்போது அங்கு வந்த ஒரு இளம் தம்பதியினர் அவரிடம் அய்யா நாங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் கோவிலுக்கு வந்தோம். நடை சாத்தியிருக்கிறது. எங்களுக்கு காத்திருக்க நேரம் இல்லை. உங்களை பார்த்தவுடன் உங்களிடம் ஆசி வாங்கலாம் என்று வந்தோம். எங்களை அசீர்வதிப்பீர்களா என்று கேட்டவுடன் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தவராக காலில் விழுந்த தம்பதியரை வாழ்த்திட்டு தான் கொண்டுவந்த துணிப்பையில் கையை விட்டு ஒரு 10 ரூபாய் நோட்டை எடுத்து அவர்களிடம் கொடுத்து  தம்பி என் காலில் விழுந்து வணங்கிய உங்களுக்கு கொடுப்பதற்கு என்னிடம் இதை தவிர வேறு எதுவும் இல்லை. ஆகையால் இதை முழு மனதோடு கொடுக்கிறேன் பெற்றுக்கொள்வீர்களா என்று கேட்டு அந்த 10 ரூபாயை நீட்டினார்.  அவர்களும் அதை பெற்றுக்கொண்டு மிக மகிழ்ச்சியோடு சொன்னது அய்யா கோவிலில் சாமியை வழிபட்ட  திருப்தி எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த சாமியே ஆசீர்வதித்தை போல் உணர்ந்தோம் என்று சொல்லி அவர்கள் கொண்டுவந்த பையினுள்ளிருந்து ஒரு கவரை எடுத்து அந்த கவரை பெரியவரிடம் நீட்டி "அய்யா நாங்கள் கோவிலுக்குள் சென்றபோது நடையடைக்கப்பட்டிருந்தது கண்டு சற்று வருத்தமாக இருந்தது. அரை மணி நேரம் ஆகும் என்று சொன்னார்கள். நாங்கள் எங்கள் அவசரத்தை சொல்லவே உடனே அங்கிருந்த ஒருவர் உங்களை காட்டி அவருக்கு நேற்று தான் 80 கல்யாணம் அமோகமாக நடந்திருக்கிறது. அவரிடம் சென்று வாழ்த்து பெற்று செல்லுங்கள் என்றார். சாமியே சொன்ன மாதிரி இருந்தது என்று சொல்லி இந்த கவரை உங்களின் 80 கல்யாணத்திற்கு எங்களின் அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூற அந்த பெரியவரும் ஏற்றுக்கொண்டார். 
 அந்த தம்பதியரும்  விடை பெற்று கொண்டு சென்றனர்.  அவர்கள் சென்றபின் அந்த பெரியவர் அந்த கவரை பிரித்தார் 50 ரூபாய் புது நோட்டு கட்டு ஒன்று பிரிக்கப்படாமல் இருந்தது. அதை பார்த்ததும் அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதோடு முதல் நாள் மாலை நடந்தது அவர் கண்முன் வந்தது. சதாபிஷேகம் முடிந்த கையோடு வந்திருந்த அனைவரும் சென்றுவிட்டனர். அமெரிக்காவில் இருந்து வந்த பையன் மருமகள் பேறகுழந்தைகள் இருவரும் மறுநாள் அதிகாலை புறப்பட தாயாராகி கொண்டிருந்தனர்.  அப்போது அந்த பெரியவரின் நீண்ட நாளைய நண்பர் ஒருவர் வந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரின் முகத்தில் படர்ந்த கவலையை பார்த்தவர் ஏம்பா நல்ல ஜம்முன்னு உன்னோட சதாபிஷேகம் முடிஞ்சது ஆனா நீ ரொம்ப கவலையா இருக்கிற மாதிரி தெரியுது என்ற உடன் அவர்களில் நீர் வழிந்தது. பின் அவர் சொன்னார் ஜோரா நடந்தது எல்லோரும் வந்து நிறைய புடவை வேஷ்டி பூ பழங்கள் ஸ்வீட் உலர் பழங்கள் என்று கொண்டுவந்து கொடுத்தார்கள் ஒரு சிலர் ஏதோ கவர்கள் கொடுத்தார்கள். ஆனால் நாளை ஊர் திரும்பும் என் பேர குழந்தைகளுக்கு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. வந்திருந்த ஒரு சில கவர்களில் இருந்த 600 ரூபாயை நம் வீட்டில் வேலை செய்யும் பேசியம்மா வுக்கு 300 ரூபாயும் கோவில் உண்டியலில் வேண்டிக்கொண்ட படி 300 ரூபாயும் கொடுத்து விட்டேன். வங்கியில் உள்ள பணத்தை எடுக்காமல் இருந்தால் தான் இந்த மாத மருந்துக்கு உண்டான பணத்தை ஆன்லைனில் கட்டி மருந்தை வீட்டிற்கு வரவழைத்து கொள்ள முடியும். பையனிடம் கேட்பதற்கு மிகவும் கூச்சமாக உள்ளது. வீட்டு வாடகை சாப்பாடு மருந்து செலவு என்று பையன் தான் பணம் அனுப்புகிறான். அதில் பெரிதாக ஒன்றும் மீதம் பிடிக்க முடியவில்லை.  அப்பிடி சேமிக்கும் பணமும் ஒரு சில கல்யாணங்களுக்காகவும் மளிகை சாமான்கள் காய்கறி என்று செலவாகி விடிகிறது. இந்த நிலையில் இதுபோன்ற function களில் வரும் எல்லோரும் புடவை வேஷ்டி என்று எடுத்து கொடுத்தால் அவ்வளவு புதுசு உள்ளே அடுக்கி வைத்திருக்கிறார்கள் எங்களுக்கு அதை கட்டிக்கொள்ள ஆயுசு பத்தாது. வருபவர்கள் இதை யோசிச்சு இனிமே இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களால் முடிந்ததை பணமாக அந்த தம்பதிகளிடம் கொடுத்தால் இது போன்ற பேரன் பேதிகளுக்கு கொடுக்கவும் என் மனைவி காய்கறி பூ என்று வாசலில் வரும் வியாபாரிகளிடம் வாங்க கைசெலவிற்கும் எனக்கு கோவில் உண்டியலில் என்னால் முடிந்ததை போடவும் அப்படியே கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களை என்றாவது ஒரு சில நாள் காசு போடவும் தெரு முனை தள்ளு வண்டி கடைகளில் என்றாவது வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கி சாப்பிடவும் உதவியாகவும் யார் கையையும் எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் செய்யுங்கள் என்று நாம் எப்படி சொல்வது. பையனிடம் இதற்க்கு மேல் கேட்பதற்கும் சங்கடமாக உள்ளது என்று கூறி முடித்தார்.  வந்த நண்பர் அவர் சொன்னதை கேட்டு வருத்தத்தோடு சென்றார். செல்லும்போது அவர் அந்த பெரியவரிடம் இனி இது போன்ற விழாக்களில் நானும் இதுபோல் செய்கிறேன். சஷ்டிப்பதபூர்தி சதாபிஷேகம் போன்ற எல்லா விழாக்களுக்கு தம்பதிகள் கையில் பணமாக கொடுப்பதை வழக்கமாக்கி கொள்கிறேன். இது இதுவரையில் எனக்கு தோணவில்லை என்று கூறி சென்றார். 
இப்போது கோவில் வாசலில் அமர்ந்த அந்த பெரியவர் நிமிர்ந்து பார்த்தார். நடை திறந்து தீபாராதனை நடந்துகொண்டிருந்தது.  அந்த பெரியவர் அந்த புதுமண தம்பதியர் போன திசையையும் ஆடவன் சன்னிதானத்தில் தெரிந்த கற்பூர ஜோதியையும் மாறி மாறி பார்த்தார். அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் இரண்டாவது முறையாக.
இது எனக்கு கிடைத்த ஒரு பாடம். இனி எந்த சஷ்டியப்தபூர்தி சதாபிஷேகத்திற்கு போனாலும் அந்த தம்பதிகள் கையில் பணமாகவே கொடுக்கவேண்டும், சம்பிரதாயங்களை கடந்து, அவர்கள் மனம் குளிர செய்வோம் என்ற உறுதி மனதில் ஏற்பட்டது.
  • 187