
கொரோனா தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கு முறையானதொரு திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை - பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு
டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தற்போது பரவிவரும் வைரஸ் தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்துகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இந்தியாவின் கேரள மாநிலத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.