தமிழர் தாயகத்தினை தமிழர்களே ஆழவேண்டும் என்ற அண்ணன் பொன்.சிவகுமாரனின் கனவை நினைவில் நிறுத்தி எமது பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக முதல் உயிர் தியாகம் செய்த பொன். சிவகுமாரனின் 51 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் எமது மக்களுக்கு எதிராக தென்னிலங்கை தரப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் அண்ணன் பொன். சிவகுமாரன் போன்றோரை வன்முறை சார்ந்த வழிமுறைக்கு தள்ளியிருந்தது. தொடர்ந்து எம்மைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் அந்த வழிமுறையில் பயணித்திருக்கின்றோம்.
நாம் அனைவரும் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாகவே 13 ஆவது திருத்தச் சட்டம் எமக்கு கிடைத்திருந்தது. அதனை முழுமையான தீ்ர்வாக கருதாத போதிலும் ஒரு ஆரம்பமாக கருத முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு தற்போது அனைத்து தமிழ் தரப்புக்களும் வந்திருப்பதை காணமுடிகின்றது.
இதனையே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
இ்வ்வாறான பின்னணியிலேயே இன்று அண்ணன் பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவு நிகழ்வில் பங்குபற்றி இருக்கின்றோம்.
பொன். சிவகுமாரன் என்ன நோக்கத்திற்காக உயிரிழந்தார்?, அவருடைய சிந்தனைகள் எந்தளவு உயர்வானதாக இருந்தன? என்பதை எல்லாம் பலரும் வெளிப்படுத்தி இருந்தனர். எனவே பொன் சிவகுமாரனின் கனவு நனவாக்கப்பட வேண்டும். அந்த கனவு, உள்ளூராட்சி சபைகளில் நடைமுறையாவதை தமிழ் தரப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
பொன். சிவகுமாரன் போன்ற விடுதலை வித்துக்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி என்பது அவர்களது இலட்சியக் கனவுகளை வென்றெடுப்பதேயாகும்." என்று தெரிவித்தார்.