ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை அன்று உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சுகாதார அமைப்பும் அதனுடன் இணைந்து, பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பணியாற்றுகின்றன. அந்த வகையில் இது குறித்து சென்னை ரெலா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக் கூறிய சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஆஸ்துமா உயிரிழப்பு இந்திய அளவில் 4.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில் அதில் பெரும்பாலான உயிரிழப்புகள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் தான் வருகிறது என மருத்துவர் பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக் கூறியுள்ளார். மக்கள் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஆஸ்துமா இருமல் சளியை சாதாரண இருமல் சளி என நினைத்து தன்னிச்சையான சிகிச்சையை மேற்கொள்கின்றனர். மேலும் பலர் மூச்சு திணரல் ஏற்படும்போது மருந்துக் கடைகளில் இருந்து Blue Inhaler-களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதன் பின்னால் இருக்கும் விளைவுகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார்.
Blue Inhaler என்றால் என்ன?:
இது ஒரு வகையான இன்ஹெய்லர் அதாவது மருந்து நிரப்பப்பட்ட அந்த இன்ஹெய்லரை நோயாளி தனது வாயில் வைத்து இழுப்பார். இப்படி செய்வதன் மூலம் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நோயாளி மூச்சு திணரல், நெஞ்சு பிடிப்பு உள்ளிட்ட பல உபாதைகளில் இருந்து விடுபடுவதுபோல் உணருவார். ஆனால் இது நிரந்தரமான தீர்வு தருமா? என கேட்டால் அது கட்டாயம் கிடையாது எனக்கூறுகிறார் மருத்துவர். இந்த salbutamol Blue Inhaler-ர் ஆஸ்துமாவிற்கான நிரந்தர தீர்வை தராது எனவும், இதனால் தற்காலிக ஆசுவாசம் பெரும் நபர்கள் மீண்டும், மீண்டும் அதை பயன்படுத்துவதாகவும் கூறினார். மருத்துவரின் ஆலோசனை இன்றி இதை தொடர்ந்து பயன்படுத்தும்போது காலப்போக்கில் ஆஸ்துமா அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாவதாகவும் மருத்துவர் பென்ஹூர் கூறியுள்ளார். மேலும், இது குறித்து 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகளும், இந்த Blue Inhaler பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு நோயாளிகளை அறிவுறுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கான சிறந்த சிகிச்சை எது?: ஆஸ்துமா நோயாளிகளுக்கான சிறந்த சிகிச்சை இன்ஹெய்லர் ஸ்டிராய்டுகள் மட்டும்தான். ஆனால் பலரும் ஸ்டிராய்டு என்ற வார்த்தையை கேட்டு பயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள தயங்குகின்றனர் என மருத்துவர் கூறியுள்ளார். இந்த இன்ஹெய்லர் ஸ்டிராய்டுகளை நோயாளிகள் பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பு பாதிப்புகள் குறைக்கப்படும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்னென்ன?
நெஞ்சு இறுக்கம்
மூச்சு திணரல்
மூச்சு விடுகையில் விசில் சத்தம்
வரட்டு இருமல்
சளி இருமல்
இவை ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகள். சரி ஒருவருக்கு ஆஸ்துமா இருக்கிறதா? இல்லையா? என்பதை எந்த வகையான மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என கேட்டபோது மருத்துவர் கூறிய பதிலை பாருங்கள்.
ஆஸ்துமா பரிசோதனைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்?: முன்பு கூறிய அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அனுகி பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட் எடுக்க வேண்டும். அதாவது நுரையீரலின் அளவு மற்றும் திறன், மார்ப்பு பகுதியில் எக்ஸ்ரே, eosinophil count மற்றும் eosinophilia, IG போன்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனைகளை நீங்கள் மேற்கொள்வதன் மூலம் அந்த நபருக்கு ஆஸ்துமா இருக்கிறதா? இருந்தால் அதன் பாதிப்பு விகிதம் எவ்வளவு என்பது உள்ளிட்ட பல தகவல்கள் இதன் மூலம் கிடைக்கப்பெறும் எனக்கூறினார். மேலும், பலரை பரம்பரை நோயாக தாக்குகிறது இந்த ஆஸ்துமா எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அலர்ஜிக்கும், ஆஸ்துமாவிற்கும் என்ன தொடர்பு?: அஸ்துமா வருவதற்கான முக்கியக் காரணம் அலர்ஜிதான் அதாவது ஒவ்வாமை. ஆரம்ப காலகட்டத்தில் ஆஸ்துமா தொடர்பான இந்த அலர்ஜி, நாசி ஒவ்வாமை போல்தான் தெரியும் என மருத்துவர் கூறியுள்ளார். இந்த அலர்ஜியானது, புழுதி, காற்று மாசு, பெர்ஃபியூம், கெமிக்கல்ஸ் உள்ளிட்டவற்றாலும் ஏற்படலாம். இதன் காரணத்தால் மூக்கில் தண்ணீர் வடிதல், அறிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் காலப்போக்கில் அந்த நபருக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஆஸ்துமாவுக்கும் அலர்ஜிக்கும் நெங்கிய தொடர்பு உண்டு. இந்த ஒவ்வாமைகள் உடலின் உள் எந்த உறுப்பை தாக்குகிறதோ அதற்கு ஏற்ற வாறு பாதிப்புகள் மாறுபடும். இது நுரையீரலை பாதிக்கும்போது அதை நாம் மூச்சுகுழாய் ஆஸ்துமா (Bronchial asthma) என கூறுகிறோம் என நுரையீரல் நிபுணர் பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக் கூறியுள்ளார்.
- 276