இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: இதமான பேச்சுகளால் சில காரியங்களை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்துக் கொள்வீர். தம்பதிக்குள் மகிழ்ச்சி உண்டு. தந்தையின் உடல்நிலை சீராகும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகி அன்யோன்யம் பிறக்கும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்.
துலாம்: எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக்கூடும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்பீர்.
தனுசு: வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். அலுவலகத்தில் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்தி தேடி வரும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். புது அனுபவம் கிடைக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.
மீனம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு செயல்படுவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 21.7.2026
இன்று காலை 08.41 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று அதிகாலை 12.07 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
இன்று இரவு 11.14;வரை சித்தம். பின்னர் சாத்தியம்.
இன்று காலை 08.41 வரை வணிசை. பின்னர் இரவு 09.02 வரை பத்திரை. பிறகு பவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை ‘ராமாயணா’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார். இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் அனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் 2 பாகமாக உருவாகி உள்ளது. ஹாலிவுட்டில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷன் நிறுவனத்தை நடத்தி வரும் நமித் மல்ஹோத்ரா, தனது பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் இதை தயாரிக்கிறார். நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸும் இணைந்து தயாரிக்கிறது.
இதன்முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் 2-வது பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் ஜூலை 24-ல் வெளியாக இருக்கிறது. அதற்கு முன் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர், முதல் முறையாக டெல்லியில் நடந்த விழாவில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது.
அப்போது தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா கூறும்போது, “எங்களது நிறுவனம் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் 8 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள நம்முடைய கலைஞர்கள், நம்முடைய திறமை, ஆர்வம் ஆகியவை உலகிலேயே சிறந்தவை என்பதால் தான் இது சாத்தியமானது. ஆனால் அதற்கான அங்கீகாரம் நமக்கு கிடைக்கவில்லை.
இந்தியாவும், இந்தியாவின் திரைப்படத் துறையும் ஹாலிவுட்டில் இருந்து தூரத்தில் இருக்கிறது. எனவே, நம்மிடம் இருக்கும், நமக்குச் சொந்தமான, நாம் பெருமைப்படக்கூடிய ஒரு கதையை ஏன் உலகுக்குச்சொல்லக் கூடாது என்று நினைத்தேன். அதற்கு ராமாயணத்தை தவிர வேறு எந்த கதையும் நினைவுக்கு வரவில்லை.
ராமாயணம் உலகின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. அதன் பெருமை, அது சொல்லும் வாழ்க்கை நெறிமுறைகளில் உள்ளது. ஏற்கெனவே அது உலக மக்களிடம் புகழ்பெற்ற காவியம். ராமாயணத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமல்லாமல், அதன் உணர்வுகள், மனிதாபிமானம் மற்றும் காலத்தால் அழியாத ஆன்மா ஆகியவற்றையும் இந்தத் திரைப்படம் மூலம் பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
சாய் பல்லவி கூறும்போது, “சீதையின் கதாபாத்திரத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அந்தக் கதா பாத்திரத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. சீதையாக நடிக்க தினமும் தியானம் செய்தேன். சில நேரங்களில், சீதையை நினைத்து, ‘நீங்கள் என்னுள் இருந்து நடியுங்கள்; இந்தப் படத்துக்குத் தேவையானது எதுவோ அது என்னுள் இருந்து வெளிப்படட்டும்’ என்று பிரார்த்தனை செய்தேன்” என்றார். நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், ஷோபனா, விவேக் ஓபராய், ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்க-கனடா எல்லையின் தெற்குப் பகுதியில் (அமெரிக்காவில்) எரிந்து வரும் காட்டுத் தீயே முக்கியக் காரணம் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்னல் காரணமாக உள்ளூர் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், எல்லைப் பகுதியில் புகையின் அளவு அதிகரிக்க அமெரிக்காவில் எரியும் காட்டுத் தீயே பிரதான காரணம் என மாகாண காட்டுத் தீ சேவை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பார்வைத் திறன் குறைவதோடு காற்றுத் தரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில், எல்லை தாண்டிப் பரவும் காட்டுத் தீ புகை மூட்டம் இரு நாடுகளுக்குமிடையே அரசியல் ரீதியான காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நகரங்களான சிகாகோ, நியூயார்க் மற்றும் டெட்ராய்ட் ஆகியவை புகையினால் சூழப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் கனடாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாழ்க்கையில் பல சோதனைகளை அடைந்த ஒரு தொழிலதிபர் தான் மதிக்கும் ஆன்மீக குருவிடம் சென்று தன் நிலையை புலம்ப ஆரம்பித்தான்.
தொழிலதிபர்: குருவே என் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சு போச்சு
எல்லாமே முடிஞ்சு போச்சு.
எதுவும் சரியில்ல
மனைவி சரியில்ல
பிள்ளைங்க சரியில்ல
தொழிலில் தோல்வி
வீதியில் நான் நடந்து போகும் போது யாரும் மரியாதை கொடுப்பதில்லை
நான் இனி வாழ்க்கையை எப்படி வாழ்வது குருவே ?
குரு: ஒன்னும் கவலைப்படாதே நான் உனக்கொரு மருந்து கொடுக்கிறேன்.
குரு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அதில் 4 கரண்டி (ஸ்பூன்) உப்பை அள்ளி போட்டு அதை தொழிலதிபரிடம் கொடுத்து குடிக்க சொல்ல .அதை குடித்த தொழிலதிபருக்கு குமட்டல் ஏற்பட்டு அந்த தண்ணீரை கீழே துப்பினார்
தொழிலதிபர்: இவ்வளோ உப்பு போட்டு எப்படி குருவே குடிக்க முடியும். எனக்கு குமட்டுகிறது
குரு: ஓ அப்படியா என்னோடு வா
அருகில் ஒரு குளத்திற்கு கூட்டி சென்று குரு அந்த குளத்தில் 4 கரண்டி (ஸ்பூன்) உப்பை போட்டு பின் தண்ணீரை குடிக்க சொல்கிறார்.
குரு: எப்படி இருக்கு தண்ணீர்?
தொழிலதிபர்: நல்லா இருக்கு குருவே
குரு: இனிப்பா இருக்கா?
தொழிலதிபர்: ஆமா இனிப்பா இருக்கு
குரு:அதெப்படி இனிப்பா இருக்கும்?அதே 4 கரண்டி உப்பை தானே இதுலயும் போட்டேன் அப்புறம் எப்படி இனிக்கும்.
தொழிலதிபர்:என்ன குருவே விளையாட்டு?
அது சின்ன குவளை அதனால் குமட்டியது
இது பெரிய குளம் குருவே அதனால் குமட்டவில்லை.
குரு: உன் மனதை ஏன் குவளையாக வைத்திருக்கிறாய் ?
குளம் போல் வைத்துக்கொள் .
வருகின்ற கவலை என்ற உப்பு கரைந்து விட்டாலும்
இனிமை மாறாத குளமாக உன் மனமிருந்தால்
ஏன் உனக்கு குமட்டல் வரும்?
அப்படி தான் இருக்கும்.
அப்படி இருந்தால் தான் அது வாழ்க்கை
இதை தான் இன்னும் தெளிவாக கவியரசு கண்ணதாசன் தனது மந்திர வரிகளால் எடுத்துரைத்திருப்பார்.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், இஞ்சி பச்சடி வைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு தேனில் கலந்து சாப்பிட பித்த, கபம் நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்
காதலுக்காகக் கிரீடத்தைத் துறந்த புதுக்கோட்டை ராஜா.
இது ஒரு சோக காதல் கதை
சினிமாவுல கூட பார்க்க முடியாத ஒரு மிரட்டலான காதல் கதை இது. 1915-ல ஆரம்பிச்ச இந்தக் கதை, நம்ம தமிழ்நாட்டுப் புதுக்கோட்டைக்கும், ஏழு கடல் தாண்டி இருக்கிற ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒரு உணர்ச்சிகரமான பந்தம். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மகாராஜா மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், அந்த காலத்திலேயே ரொம்ப ஸ்டைலானவர், உலக அறிவும் நவீன சிந்தனையும் கொண்டவர். அப்போதெல்லாம் ஆஸ்திரேலியாவுக்குப் போறது லேசுப்பட்ட விஷயம் இல்லை. "Whites Only" (வெள்ளையர்களுக்கு மட்டுமே) என்கிற கடுமையான இனவெறிச் சட்டம் அங்கே அமலில் இருந்தது. ஆனா, நம்ம ராஜாவோட ஆளுமைக்கும், அந்தஸ்துக்கும் முன்னாடி அந்தச் சட்டமெல்லாம் மண்டியிட்டுச்சு. அவருக்கு மட்டும் சிறப்பு அனுமதி கிடைச்சது.
சிட்னிக்கு டூர் போன ராஜா, அங்கே மோலி என்கிற அந்த ஆஸ்திரேலிய அழகியைச் சந்திக்கிறாரு. பார்த்தவுடனேயே காதல் பத்திக்கிச்சு. மோலியும் ராஜாவோட அந்த அறிவையும், மிடுக்கையும் பார்த்து மனசைப் பறி கொடுத்தாங்க. 1915-ல மெல்போர்ன்ல வச்சு இவங்க கல்யாணம் முடிஞ்சுது. ஆனா, இந்தக் கல்யாணத்தை அந்த நாட்டுப் பத்திரிகைகள் தாங்கிக்கவே முடியல. "நம்ம ஊரு வெள்ளையினத்துப் பொண்ணு எப்படி ஒரு இந்திய ராஜாவைக் கல்யாணம் பண்ணலாம்?"னு விஷத்தைக் கக்குனாங்க. "புதுக்கோட்டைங்கிறது இந்தியாவோட கால் கட்டை விரல் நகம் மாதிரி இருக்குற ஒரு சின்ன இடம், அங்கே இருக்குற ராஜாவுக்கு இவ்வளவு தைரியமா?"ன்னு ரொம்பக் கேவலமா எழுதினாங்க. ஆனா, இதையெல்லாம் விடப் பெரிய இடி லண்டன்ல இருந்து வந்துச்சு.
பிரிட்டிஷ் அரசாங்கமும், ஜார்ஜ் மன்னரும் இந்தக் கல்யாணத்தை அங்கீகரிக்கவே மாட்டோம்னு ஒத்தைக்காலுல நின்னாங்க. "மோலியை ராணின்னு சொல்லக்கூடாது, அவங்களுக்கு எந்த அரசு மரியாதையும் கிடையாது, 11 குண்டு முழக்க மரியாதையும் ரத்து"ன்னு உத்தரவு போட்டு, ராஜாவை ஒரு வழி பண்ணிட்டாங்க. ஆனா ராஜா எதற்கும் அசரல. 1915 டிசம்பர்ல மோலியைத் தன் ஊரான புதுக்கோட்டைக்கு அழைச்சுட்டு வந்தாரு. நம்ம ஊர் மக்கள் எல்லாம் அவங்களை ஒரு மகாராணி மாதிரி அன்போடு வரவேற்றாங்க. ஆனா, அந்த வெள்ளைக்கார அரசாங்கம் செஞ்ச வேலை இருக்கே, அது ரொம்பக் கொடுமை.
மோலி கர்ப்பமா இருந்தப்போ, அவங்களுக்குத் தர்ற கசாயத்துல அரளி இலையை அரைச்சு விஷம் வச்சுக் கொல்லப் பார்த்தாங்க. தன் மனைவியோட உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சதும் ராஜா பதறிப்போயிட்டாரு. அவங்களை ஊட்டியில பாதுகாப்பா வைக்கலாம்னு ஒரு வீடு வாங்கப் பார்த்தாரு, அதுக்கும் அந்த அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டுச்சு. "ஒண்ணு ராஜாவா இரு, இல்ல உன் பொண்டாட்டி கூட போ"ன்னு ராஜாவுக்கு நெருக்கடி கொடுத்தாங்க. ராஜா யோசிக்கவே இல்லை. "என் பதவியும், நாடும் போனாப் போகுது, என் மனைவியும் அவங்க கௌரவமும்தான் முக்கியம்"னு சொல்லிட்டு, தன் வாரிசுக்குக் கிடைக்க வேண்டிய ராஜ பதவியையும் துறந்துட்டு, பென்ஷன் வாங்கிக்கிட்டு ஐரோப்பாவுக்கே போயிட்டாரு.
அங்கே அவங்களுக்கு 'மார்த்தாண்ட சிட்னி'ன்னு ஒரு மகன் பிறந்தான். ஆனா, அந்தப் பையனை வாரிசா ஏத்துக்க பிரிட்டிஷ் அரசு மறுத்துட்டாங்க. இதனாலேயே அந்தப் பையன் பிற்காலத்துல சில தப்பான வழிகளுக்குப் போய் ஜெயிலுக்கும் போயிருக்காரு. 1928-ல ராஜா திடீர்னு இறந்து போனப்போ, அவரோட உடலை இந்தியாவுக்குக் கொண்டு வரக் கூட மோலிக்கு அனுமதி கிடைக்கல. லண்டன்லயே அவரைத் தகனம் பண்ணிச் சாம்பலை வச்சுட்டாங்க. மோலி அதுக்கப்புறம் ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. உலகப்போர் சமயத்துல நியூயார்க்ல துணிக்கடையில வேலை பார்த்தாங்க. என்னதான் வறுமை வந்தாலும், ராஜாவுக்குத் துரோகம் செய்யாம, கடைசியில 1967-ல அவங்க இறந்தப்போ, அவங்க சாம்பலையும் லண்டன்ல ராஜா இருந்த இடத்திலேயே வச்சாங்க. சாகுற வரைக்கும் அந்த ஊர் ராணியா ஆக முடியலனாலும், காதலிச்ச கணவர் கூடவே போய்ச் சேர்ந்துட்டாங்க. ஒரு அழகான காதல், இனவெறிக்கும் அதிகாரத்துக்கும் பலியான கதை இது.
வாரியார் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். முன் வரிசையில் இருந்த நாத்திகர் ஒருவர் எழுந்து "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?" என்ற வினாவை எழுப்பினார். சம்பாஷணைகள் ஆரம்பமானது.
"உங்களது பிரதான உணவு என்ன? அதாவது அரிசியா, கோதுமையா?"
"அரிசி!"
"அரிசியில் என்னென்ன பதார்த்தங்கள் செய்யலாம்?"
"சாதம், பொங்கல், இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம், பிரியாணி, இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம். ஏன் இதை கேட்கிறீர்கள்?"
"இல்லை அரிசியை ஊறவைத்து தின்றுவிட்டு போகலாமே, அதையேன் மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து இத்தனை பதார்த்தங்கள் செய்ய வேண்டும்? அதற்காக கேட்டேன்"
"எப்படி சாமி வெறும் அரிசியை ஊறவைத்து தின்பது?. நாவிற்கென்று ருசி தேவைப்படுகிறதே"
"சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, ஆனால் மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அது போலத்தான் இறைவன் ஒருவனே இந்துக்கள் ஆன்மிக ருசிக்காக பல உருவங்களில் துதித்து வணங்கி மகிழ்கிறார்கள்."
கேள்வி கேட்ட நாத்திகர் மேடையேறி வாரியாரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது.
ஒரு பிரச்சார கூட்டத்தில் கேட்டது.
கணவன்: (திமிராக) என் போனுக்கு நான் பாஸ்வேர்ட் மாத்திட்டேன். உன்னால கண்டுபிடிக்கவே முடியாது!
மனைவி: (சிரித்துக்கொண்டே ) எனக்கு உங்க பாஸ்வேர்ட் தேவையே இல்லைங்க. நீங்க தூங்கும்போது உங்க விரலை எடுத்து 'பிங்கர் பிரிண்ட்' வச்சு லாக் ஓபன் பண்ண எனக்குத் தெரியும். பாஸ்வேர்ட் மாத்துனதை விட, உங்க விரலை எங்கயாவது மாத்தி வைக்க முடியுமான்னு பாருங்க!
கணவன்:????..??