நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் செலுத்த முடியும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது000
எத்தகைய தடைகள் வந்தாலும் நீதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான நீதி நடவடிக்கைகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தடுக்கப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளாரா என வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் நீதி நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்றவும் கைதுகளை தடுக்கவும் பலர் முயற்சித்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்மேலும் பொலிஸ் மா அதிபர் பதவியில் இல்லாவிட்டாலும் நீதித் திட்டம் நிறுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார்.அதன்படி பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானதும் அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்000
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.மேலும், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது00
ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா தற்போது ஆயுத ஏற்றுமதி நாடாக வளர்ச்சியடைந்துள்ளது.2024 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய, உலகின் முதல் 25 ஆயுத ஏற்றுமதியாளர்களின் பட்டியலில் இந்தியா தற்போது நுழைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.2017 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை உற்பத்தி 74,054 கோடி இந்திய ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் 108,684 கோடி ரூபாவாக உயர்வடைந்துள்ளது.2015 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக மாறியது.எவ்வாறாயினும் தற்போது முதல் 25 ஆயுத ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.இந்தியாவின் பாதுகாப்புத்துறை, தனியார்துறை மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பாதுகாப்பு ஏற்றுமதியை அடைய பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அண்மைய கணக்கெடுப்பு காட்டுகிறது.மேலும், பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் ஏற்றுமதி அனுமதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இதன்படி, 2023 ஆம் நிதியாண்டில் இந்திய அரசு வழங்கிய ஏற்றுமதி அனுமதிகளின் எண்ணிக்கை 1,414 ஆகும். இந்த எண்ணிக்கை 2024 ஆம் நிதியாண்டில் 1,507 ஆக அதிகரித்துள்ளது.டோனியர்-228, பீரங்கி, பிரம்மோஸ் ஏவுகணைகள், பினாகா ராக்கெட்டுகள் மற்றும் லாஞ்சர்கள், ரேடார்கள், சிமுலேட்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் போன்ற விமானங்கள் போன்ற பரந்த அளவிலான பாதுகாப்பு பொருட்கள் மற்றும் உபகரணங்களை சுமார் 100 உள்ளூர் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.00
நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன சுகவீனம் காரணமாக தனது 81 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.1943 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி லுணுகலையில் பிறந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, மத்துகமவில் தனது ஆரம்பக் கல்வியையும், பின்னர் இடைநிலை கல்வியை கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் பூர்த்தி செய்தார்.அதன்பின்னர் இலங்கை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததுடன், இங்கிலாந்தின் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1970ஆம் ஆண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.இதனையடுத்து நாடு திரும்பிய அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார்.1962 ஆம் ஆண்டு விக்ரமபாகு கருணாரட்ன, லங்கா சம சமாஜக் கட்சியில் இணைந்து தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 1972 ஆம் ஆண்டில் அந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், 1972 ஆம் ஆண்டில் சம சமாஜக் கட்சி அன்றைய ஆளும் கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கும் ஆதரவளித்ததைத் தொடர்ந்து அவர் கட்சித் தலைமையுடன் முரண்பட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டில் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோருடன் இணைந்து புதிய சமூக சமத்துவக் கட்சி என்ற நவ சம சமாஜக் கட்சியை ஆரம்பித்தார்.விக்ரமபாகு கருணாரட்ன, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தமது காலத்தில் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.000
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை தொடர்பில் 43 வருடங்களாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், பணத்தை மீதப்படுத்துவதற்கும், ஆதரவு வேட்பாளர்களை தடுப்பதற்கும் வைப்புத்தொகை அவர் வலியுறுத்தியுள்ளார்.தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ;1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 50,000 ரூபாவை மட்டுமே வைப்பிலிட வேண்டும். அதேசமயம் சுயேற்சை வேட்பாளர் அல்லது வேறு ஏதேனும் கட்சி அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 75,000 ரூபாவை மட்டுமே வைப்பிலிட வேண்டும்.இந்தத் தொகையை அதிகரிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.இந்த நிலையில், குறித்த தொகையானது அரசியல் கட்சிகளுக்கு 2.5 மில்லியன் ரூபாவாகவும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு 3 மில்லியனாகவும் அதிகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு முன்மொழிந்தது.இதுவொரு பொருத்தமான முன்மொழிவாக இருந்த நிலையில், கடந்த தேர்தலின் போது 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், முதல் இரண்டு போட்டியாளர்களைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் செலுத்திய வைப்புத்தொகை ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றப்பட்டது.ஆனால், இம்முறைத் தேர்தலில் எந்தவொரு அடிப்படையும் இன்மையால் வேட்பாளர்களின் எண்ணிக்கை 80 அல்லது 85 ஆக இருக்கலாம்.மேலும், வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்காகவும் பெரும் தொகை செலவிடப்படும்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முன்மொழியப்பட்ட திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றுகையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.தேர்தல்கள் ஆணைக்குழு சில காலத்திற்கு முன்பு இந்த முன்மொழிவை முன்வைத்த போதும், ஒரு சட்டத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னதாக பல்வேறு நடைமுறைகள காணப்படுவதாகவும் அவர் இந்தபோது சுட்டிக்காட்டினார்.இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இல்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.அதனடிப்படையில் சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதில் இலங்கை கடவுச்சீட்டு 84 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.மேலும், பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது00
அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி வேதன முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம்முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சுமார் 7 இலட்சம் பேர் நன்மையடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், அரச சேவையில் நிலவும் வேதன முரண்பாடுகள் தொடர்பில் ஆராயத் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.அந்த குழு முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இணக்கம் எட்டப்பட்டதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.குறித்த போட்டியில் தாய்லாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தாய்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி தாய்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 94 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 11.3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காமல் அணித்தலைவி சமரி அத்தபத்து அதிகபட்சமாக 49 ஓட்டங்களையும், விஸ்மி குணரத்ன 39 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது000
இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மாறாக உள்நாட்டிலேயே தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். இல்லாதுவிட்டால் கல்விக்காகப் பெருமளவு பணத்தைச் செலவு செய்யும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கான பலன் எமது நாட்டுக்குக் கிடைக்காது போகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.. மேலும் இலங்கை தொடர்ந்தும் வளர்ச்சியடையாத நாடாக இருக்கக் கூடாது. புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவகையில் கல்வி முறையைச் சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வருவதுடன், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படும். நாட்டில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய தொழில்நுட்பப் பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு புதிய தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் தலைமுறையினர் அவசியம். புதிய பொருளாதாரம் உருவாக்கப்படாவிட்டால், இந்த நாட்டின் மாணவர்களுக்கு எதிர்காலம் இருக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
பரீட்சைகள் நாட்காட்டியைப் புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, நிறைவடைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியானால் அது சாத்தியமாகும். அதேநேரம், உயர் தரம் மற்றும் ஏனைய பரீட்சைகளை அதற்கு முன்னர் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.000
இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த ஆண்டு ஜனவரிமுதல் கடந்த 22 ஆம் திகதி வரை மாத்திரம் 250 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.எனவே, இந்த நிலைமையைத் தணித்திட தூதரகமட்ட முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது00
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.76 ஆண்டுகளாக, எங்களை திவாலான நிலைக்கு இட்டுச் சென்ற ஒரு திறமையற்ற அரசியல் குழுவால் நாங்கள் வழிநடத்தப்பட்டோம்.இலங்கை வளர வேண்டுமானால், வருமானத்தை அதிகரிக்க நமது இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.இலங்கையை முன்னேற்றுவதற்கு என்னுடன் இணையுமாறு ஒவ்வொரு இலங்கையரையும் நான் அழைக்கிறேன்.எனவே, எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலை மறியலால் பணிக்கு வராத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ளார்.நேற்றையதினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.அந்த மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலைத் தடைகள் காரணமாக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்லும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைபட்டதால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அதிகாரிகளுக்கு இந்த சிறப்பு விடுமுறை வழங்க அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000