Feed Item
Added article 

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தாலே கிசுகிசுக்களை கிளம்பி விடும் நிலையில் கிட்டத்தட்ட சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகையாக இருந்தும் ஒரு நடிகருடன் கூட கிசுகிசு இல்லாத ஒரே நடிகை என்றால் அது நதியா தான்.

ஃபாசில் இயக்கிய ‘பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகை நதியா திரையுலகில் அறிமுகமானார். அதற்கு முன் ஒரு சில மலையாள படங்களில் நடித்த அவர் இந்த படத்தின் வெற்றியால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

சீனியர் நடிகர்களாக இருந்தாலும் புதுமுக நடிகர்களாக இருந்தாலும் அவர்களுடன் ஜோடியாக நடிக்க நதியா தயங்குவதில்லை. தன்னுடைய கேரக்டர் வலிமையானதா? என்பதை மட்டுமே அவர் பார்ப்பார். அதுமட்டுமின்றி கிளாமராக நடிக்க மாட்டேன், நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன், கட்டிப்பிடித்து படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என முன்கூட்டியே அவர் தனது நிபந்தனைகளை விதித்து விடுவார்.

அவரது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரது கால்ஷீட்டுக்காக மாதக்கணக்கில் காத்திருந்த வரலாறு உண்டு. அது மட்டுமின்றி எந்த ஊரில் படப்படிப்பு நடந்தாலும் எந்த நாட்டில் படப்படிப்பு நடந்தாலும் அவர் தனது அம்மாவுடன் தான் படப்பிடிப்புக்கு செல்வார் என்பதும் 24 மணி நேரமும் அவரது அம்மா அவரை பாதுகாப்புடன் கவனித்துக் கொண்டதால் எந்த நடிகரும் நதியாவை நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற சீனியர் நடிகர்களுடனும், மோகன், சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசனுடன் அவர் நடித்த ஒரே படமான ‘அன்புள்ள அப்பா’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் அளவில் அந்த படம் வெற்றி பெறவில்லை.

நதியாவின் தந்தை மோய்டு இஸ்லாம் மதத்தையும், தாயார் லலிதா இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர் பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை 1988 ஆம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு முன் அவர் கடைசியாக நடித்த படம் ’ராஜாதி ராஜா’. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் ரஜினியுடன் அவர் நடித்த ஒரே படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னர் சுமார் பத்து ஆண்டுகள் அவர் சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் ஜெயம் ராஜா அவரை எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்திற்காக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார். அதன் பிறகு அவர் ’தாமிரபரணி’ ’சண்டை’ ’பட்டாளம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். குறிப்பாக ‘த்ரிஷ்யம்’ தெலுங்கு பதிப்பில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்போது கூட அவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தோனி தயாரிப்பில் உருவாகி வரும் ’எல்ஜிஎம்’ படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் மாட்டாமல் திருமணத்திற்கு முன்னர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிய நதியா திருமணத்திற்கு பின்னர் இரண்டு பெண் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இப்போதும் கூட அவர் படப்பிடிப்புக்கு அமெரிக்காவில் இருந்து தான் வந்து நடித்துக் கொடுத்து விட்டு சென்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 340