Feed Item
Added a post 

ஒரு கிராமத்தில் ஒருவர் இருந்தார்.ருசியான வித விதமான வடைகள் சுடுவதில் வல்லவர்.அது தான் அவரது தொழிலும் கூட.அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.அதனால் எந்த செய்தித்தாள்களையும் அவர் படிக்க மாட்டார்.செய்தித்தாள்களைப் படிக்கும் பழக்கம் இல்லாததால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.அதனால் டிவி பார்க்கும் பழக்கமும் அவருக்கு இல்லை.

அதனால் அவரது முழுக் கவனமும் அவரது வடை தொழிலில் மட்டுமே இருந்தது.வேறு எந்த சிந்தனையும் அவருக்கு இல்லை.விதவிதமான ருசியான வடைகளைத் தருவதால் அதுவும் குறைவான விலையில் தரமாகத் தருவதால் அவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் கூட்டமும் மிக அதிகமாக இருந்தது.வருமானமும் நிறைவாக இருந்தது.அவரும் மகிழ்ச்சியாக இருந்தார்.

அவருக்கு ஒரு மகன் இருந்தான்.அவன் சென்னையில் மிகப் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் எக்கனாமிக்ஸ் படித்து வந்தான்.பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் மிக ஆக்டிவ்வாக இருப்பான்.விடுமுறையில் ஊருக்கு வந்தான்.அப்படியே தன் தந்தையின் கடைக்கும் போனான்.

அங்கே வடைகளுக்காக விதவிதமான மளிகை சாமான்கள், காய்கறிகள் எண்ணெய் வகைகள் என ஏகப்பட்ட சரக்குகளை தன் தந்தை வாங்கி வைத்து இருப்பதைப் பார்த்தான்.

நேராக தந்தையிடம் சென்றான்,

"என்னப்பா நீ...முட்டாத்தனமா இருக்க...நாட்ல பொருளாதார மந்தநிலை இருக்குறது உனக்கு தெரியாதா?பல ஆட்டோமொபைல் கம்பனிங்க சங்கடத்துல இருக்கு.நிறைய ஷோரூம்களை மூடிட்டாங்க.நிறைய பேருக்கு வேலை போச்சு.இது அப்படியே எல்லா இன்டஸ்ட்ரிக்கும் பரவ போகுதாம்.பணக் கஷ்டம் வர போகுதாம்.பேங்குங்க எல்லாம் திவாலாகப் போகுதாம்.அதனால பணத்தை சேர்த்து வையி.இப்படி கன்னாபின்னான்னு சரக்குகளை வாங்கி குமிக்காதே...‌" என்று தான் படித்த மைக்ரோ எக்கனாமிக்ஸ் மற்றும் மேக்ரோ எக்கனாமிக்ஸ் கலந்து லெங்க்த்தாக ஒரு ஸ்பீச் தந்தான்.போதாக்குறைக்கு பொருளாதார மந்தநிலை பற்றி பேஸ்புக்கில் எழுதப்பட்ட ரைட்டப்களையும், வாட்சப்பில் வரும் தகவல்களையும் வேறு தன் தந்தைக்கு காட்டினான்.

இதையெல்லாம் பார்த்த அவனது தந்தையும்,

"ஆஹா நமக்கு தான் எழுதப் படிக்கத் தெரியாது.நம்ம புள்ள மெட்ராஸ்ல படிக்குறவன்.அவன் சொன்னா தப்பா இருக்காது...."என்று எண்ணினார்.

உடனடியாகத் தன்னிடம் இருக்கும் சரக்குகளைப் பாதியாக குறைத்தார்.வாங்கிய இடத்திலேயே அதைத் திரும்பத் தந்தார்.

ஆரம்பத்தில் 50 விதமான வடைகளை விற்றவர், மறுநாளே வடைகளில் வெரைட்டியை 10 ஆக குறைத்தார்.விற்பனையையும் குறைத்தார்.

அவரது கடைக்கு அவரது வெரைட்டியான வடைகளுக்காகவே வந்த கூட்டம் வெரைட்டியான வடைகள் கிடைக்காததால் பாதியாக குறைந்தது.

வாடிக்கையாளர்கள் கூட்டம் பாதியாக குறைந்ததைப் பார்த்து இவரும் தன் விற்பனையை மேலும் சுருக்கினார்.உளுந்த வடையை மட்டுமே போடத் துவங்கினார்.உளுந்த வடையை மட்டும் விரும்பும் வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்கு வந்தனர்.அதைப் பார்த்ததும் மேலும் பதறினார்.

விற்பனை மந்தமாவதால் நாளை முதல் என் வடை கடை காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது...என்ற போர்டை வைத்து கடையை மூடினார்.

தன் மகனை அழைத்தார்,

"ஆமாப்பா...நீ சொன்ன மாதிரியே நாட்ல பொருளாதார மந்தநிலை இருக்கு.நம்ம கடைக்கு வர்ற ஆட்கள் கூட குறைஞ்சுகிட்டே போயி...கடைசில யாருமே வரலை... வியாபாரமும் படுத்திருச்சி...இருக்குறதையாவது காப்பாத்தனும்ன்னு நானும் கடையையே மூடிட்டேன்..." என்றார்.

தான் படிக்கும் எக்கனாமிக்ஸ் அறிவைக் கொண்டு தன் தந்தையை தான் காப்பாற்றியதாக மகனும் தனக்குத் தானே பெருமைப்பட்டுக் கொண்டான்.

ஆனால் நன்றாக வியாபாரம் நடந்து கொண்டு இருந்த வடை கடையை எதற்காக அவர் மூடினார் என்பது மட்டும் அவரது வாடிக்கையாளர்களுக்கு கடைசி வரையிலும் தெரியவே இல்லை.

  • 257