Feed Item
Added a news 

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள நாசாவின் முக்கிய இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையாக சுனிதா வில்லியம்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) 3வது முறையாக விண்வெளிக்குச் செல்லவிருந்தார். இந்நிலையில், திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா (NASA) தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசாவின் முக்கிய விண்வெளி வீராங்கனை ஆவார். சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது 58 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் செல்ல இருந்தார்.

கடந்த 2முறை சென்ற போதும் சுனிதா வில்லியம்ஸ் பகவத்கீதையையும் தன்னுடன் விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் விண்வெளி நிலையத்தில் 322 நாட்கள் தங்கியிருக்கும் திட்டத்தில் இன்று (மே 7) சுனிதா விண்வெளிக்குச் செல்லத் தயாராக இருந்தார்.

இந்த விண்கலம் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரலில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் இத்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. ஏவுகணை ஏவப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இத்திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் வால்வில் ஏற்பட்ட கோளாறுதான் இதற்கு காரணம் எனவும், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள இது வேறு ஒரு நாளில் ஏவப்படும் எனவும் நாசா தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நாசாவின் பேரி வில்மோர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

  • 276