·   ·  1554 posts
  •  ·  0 friends

சீடனுக்கு குரு அளித்த விளக்கம்

குரு ஒருவரிடம் பல சீடர்கள் குருகுலத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தார்கள். வேதங்கள், புராணங்கள், கடவுளரது தர்ம தத்துவங்கள் போன்றவற்றை குரு தன் சீடர்களுக்கு தினமும் போதித்து வந்தார்.

ஒருநாள் அவர் கடவுளைப் பற்றி சில மெய்ஞான விளக்கங்களைக் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்போது மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சீடர்களில் ஒரு சீடன் மட்டும் கேள்வி ஒன்றை எழுப்பினான்.

சீ டன் கேட்ட கேள்வி இதோ!

"குருவே! கடவுள் உண்மையிலேயே இருக்கின்றாரா? அப்படியெனில் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்?"

குரு சற்றே புன்னகைத்தார். அவர் தன் சீடனை நோக்கி, "சீடனே! கடவுள் அனைத்து இடங்களிலும் வீற்றிருக்கிறார். மேலும் அனைத்து உயிர்களுக்கு உள்ளே உரைந்துள்ளார். இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து உயிருள்ள ஜீவராசிகள் மற்றும் உயிரற்ற பொருட்களிலும் வாசம் செய்கிறார். எல்லாமே கடவுளின் அம்சம்தான். அதை உணரும் அறிவையும் ஞானத்தையும் நாம் இன்னும் பெறவில்லை." என்று பக்தி மனம் கமழ விடையளித்தார்.

சீடன் அகம் மகிழ்ந்து "அருமையான விளக்கம் அளித்தீர் குருவே! என் ஐயம் தீர்ந்தது. நான் இனி அனைவற்றிலும் இறைவனைக் காண்பேன்!" என்று கூறினான்.

மறுநாள் சீடர்கள் அனைவரும் குருகுலப் பாடங்கள் முடிவடைந்து மாலை நேரத்தில் தினமும் வரும் கானகத்தின் வழியே வீட்டிற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக யானையின் முரட்டுப் பிளிரல் சத்தம் ஒன்று கேட்டது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று சீடர்கள் ஆராய்வதற்கு முன்னரே மதம் கொண்ட யானை ஒன்று சற்று தொலைவிருந்து சீடர்கள் நடந்து வந்த திசை நோக்கி ஓடி வந்தது. யானையின் மேல் அமர்ந்திருந்த பாகன் வழியில் நடந்துகொண்டிருந்த சிலரை கவனித்து உரத்த குரலில் "யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அனைவரும் ஓடிவிடுங்கள்! வழியில் நிற்கவேண்டாம்!" என்று எச்சரித்தான்.

இதைக் கேட்ட நமது குருவின் சீடர்களும் மற்றவரும் தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். சிலர் தாம் எடுத்து வந்திருந்த உடைமைகளைக் கூட பொருட்படுத்தாமல் கீழே போட்டுவிட்டு ஓடினர்.

ஆனால் நமது குருவிடம் சந்தேகம் கேட்ட ஆர்வக்கோளாறு சீடனோ யானையின் வழித்தடத்தில் பொம்மைபோல் அசையாமல் நின்றுகொண்டிருந்தான். மற்ற சீடர்களுள் ஒருவன், "நீ ஏன் மரம் போல் நின்று கொண்டிருக்கிறாய்? எங்களுடன் வா!" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தான்.

ஆனால் ஆர்வக்கோளாறு சிறுவனோ தனது நண்பனின் கையை உதறிவிட்டான். "என்னை விடு! நான் வரமாட்டேன்! குரு கூறியதை நீ மறந்துவிட்டாயா? கடவுள் அனைத்து உயிர்களிலும் வாசம் செய்பவன். இந்த மதம் கொண்ட யானையிலும் கடவுள் இருக்கின்றார். அவர் என்னை எதுவும் செய்யமாட்டார். நீ செல்! நான் இங்கேயே இருப்பேன்!" என்று பொறுமையுடன் கூறினான்.

உடனே நண்பன், "அடே மூடனே! உன் அறிவீனச் செயலுக்கு இது நேரமில்லை. வா ஓடலாம்!" என்று பதட்டத்துடன் கூறினான். அப்பொழுதும் ஆர்வக்கோளாறு சீடன் செல்லமறுத்துவிட்டான்.

யானை சீற்றத்துடன் சீடனை நோக்கி வேகமாக வந்தது. நண்பன் பயந்து ஓடத்தொடங்கினான். "நண்பா! வேகமாக ஓடிவிடு! நிற்காதே!" என்று கூவிக்கொண்டே நண்பன் ஓட்டம் பிடித்தான். யானை மிக அருகில் வந்துவிட்டது. பாகனோ, "பாலகா! நான் கூறுவது உன் செவியில் விழவில்லையா? யானை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. வேகமாக ஓடிவிடு!" என்று கத்தியதோடு செய்கையிலும் சீடனை ஓடச்சொன்னான்.

யார் கூறியும் நமது சீடன் கல்தூண் போல் அசையாமல் நின்றார்.

யானை சீடனருகில் வந்து பலுதூக்கும் வீரரைப் போல் சீடனைத் தூக்கி, சிலம்பாட்ட வீரரைப் போல் சீடனை சில முறை சுழற்றி, கம்பு எரியும் வீரரைப் போல் சீடனை தூக்கி வீசியது. மட்டைப்பந்து போட்டியில் எப்படி பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி பறந்து செல்லுமோ அப்படி சீடனும் பறந்து சென்று மாமரக்கிளைகளுக்கிடையில் சிக்கி கீழே விழுந்தான். அவனது நல்ல நேரம் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினான்.

யானை பிளிரிக்கொண்டே வெகுதூரம் சென்றுவிட்டது. சீடனை யானை தூக்கி வீசியதைக் கண்ட சீடனின் நண்பர்கள் காயங்களுடன் மயங்கியிருந்த அவனை அருகிலிருந்த கிராமத்தில் உள்ள வைத்தியசாலைக்கு விரைவாக அழைத்துச்சென்றனர். பல மூலிகைகளை உடலின் காயங்களுக்குத் தடவி வைத்தியர் சீடனுக்குச் சிகிச்சை செய்தார்.

சீடன் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பிதற்றிக்கொண்டிருந்தான்.

சீடனின் நண்பர்கள் அவனுடன் நாள் முழுவதும் இருந்தனர். இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வைக் கேள்வியுற்று குருநாதர் சீடனைக் காண வைத்தியசாலைக்கு வந்தார். அவர் சீடனிடம், "ஏன் இப்படிச் செய்தாய்? யானை அருகில் வருமுன் ஓடியிருக்கலாமல்லவா? இத்தனை துயரம் உனக்குகெதற்கப்பா?" என்று அன்புடன் வினவினார்.

சீடன் குருவிடம், "குருவே! நீங்கள் சொன்ன போதனையின்படி மதம் கொண்ட யானையிலும் கடவுள் உள்ளார் அல்லவா? அப்படியிருக்க யானை என்னை தூக்கி வீசியதையும் யானையின் உள்ளிருந்து கடவுள் ஏன் வேடிக்கை பாத்துக்கொண்டிருந்தார்? அவர் என்னை காப்பாற்றியிருக்கலாமல்லவா? யானையின் கோபத்தை நீக்கியிருக்கலாமல்லவா?" என்று வலியுடன் கேட்டான்.

குருநாதர் அளித்த விடை சீடனுக்கு சரியான ஞானத்தை வழங்கியது.

"சீடனே! மதம் பிடித்த யானையில் கடவுளைக் கண்ட நீ , உன்னை பல முறை எச்சரித்த யானைப்பாகன் மற்றும் உனது நண்பனுக்குள்ளும் கடவுள் இருப்பதை உணர மறுத்தது ஏன்? அந்த இரு கடவுளரும் உன்னைக் காப்பாற்ற நினைத்தார்களல்லவா? அவர்களுக்குள் கடவுள் வந்து உன்னை காப்பாற்ற முயன்றபோதும் நீ செவிசாய்க்காமல் யானையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாயல்லவா? நான் நேற்று என்ன கூறினேன்? கடவுள் அனைத்திலும் உள்ளார். அவரை கண்டறியும் அறிவையும் ஞானத்தையும் பெற முயலவேண்டும் என்றேன். இப்போது புரிகிறதா? கடவுள் நம்மைச் சுற்றியே எப்போதும் வீற்றிருக்கிறார். நாம்தான் கடவுளின் கட்டளையைப் பகுத்தறிவைக் கொண்டு புரிந்துகொள்ளாமல் எங்கேயோ வேடிக்கை பார்ததுக்கொண்டிருக்கின்றோம். இதுவே அனைத்து துன்பங்களுக்கும் காரணமாகும்! உடலை நன்கு தேற்றிக்கொண்டு பின்னர் பாடசாலைக்கு வா!" என்று குருநாதர் கூற சீடனுக்கு தெளிவு பிறந்தது.

  • 16
  • More
Comments (0)
Login or Join to comment.