
என்னத்த சொல்றது?
‘‘என்ன சொன்னாலும் பிரச்சினை ஆகுதே!
ஏங்க! என்னோட பர்ஸ்ல ஆயிரம் ரூபா குறையுது.
நீங்க எடுத்தீங்களா?’’ சேகரின் மனைவி அலைபேசியில் பதட்டத்துடன் கேட்டாள்.
‘‘எம்.டி.யோடு மீட்டிங்ல இருக்கேன். கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடட்டுமா?’’ என்று போனை வைத்தான் சேகர்.
என்னோட பாக்கெட்டிலும் அவ்வப்போது பணம் காணாமல் போகும்! அவளிடம் கேட்டால், கோபத்தில் எரிந்து விழுவாள்.
இனி பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்! எப்படி பாதுகாத்தாலும் பல ஆயிரங்கள காணாமல் போயிருக்கிறது.
நான் யார்கிட்ட இதைப் போய் கேட்பேன். தனக்குத்தானே பேசிக்கொண்டான் சேகர்.
அரை மணி கழித்து மனைவி மீண்டும் லைனில் வந்தாள்.
‘‘இல்லம்மா! கீழ ஒரு ஆயிரம் ரூபாயைப் பார்த்தேன்.
என்னோடதா இருக்கும்னு நெனைச்சு எடுத்து வெச்சுகிட்டேன்!’’ என்றான்.
‘‘நல்ல வேளை! வேலைக்காரி, நம்ம பையன், உங்க அம்மா எல்லார் மேலேயும் சந்தேகப்பட்டுட்டேன்! பணம் எடுத்தா சொல்லமாட்டீங்களா?’’ என்றாள்.
‘‘ஸாரி!’’ சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினான் சேகர்.
அன்றிரவு, வீட்டுக்குச் சென்றதும், அவனை பிலு… பிலு…வென பிடித்துவிட்டாள். ‘‘பணம் காணாமப் போச்சு!’னு பொய் சொன்னேன். நீங்க நான்தான் எடுத்தேன்னு நாடகம் ஆடுறீங்க!
என்ன… உங்கம்மாவுக்கும், வேலைக்காரிக்கும் சப்போர்ட்டா?’’ என்றாள். அவனுக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிட்டது!