- · 0 friends
வாழ்க்கையின் போக்கை மாற்றிய யோசனை
பீட்சா டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தவர் மும்பையை சேர்ந்த கௌரவ் லோந்தே. இவர் தான் மும்பை டிராஃபிக்கை கொண்டு வெற்றிகரமாக ஒரு தொழிலை நடத்தி வருகிறார். பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இவரது யோசனையை வெகுவாக பாராட்டியுள்ளார். அப்படி அந்த இளைஞர் என்ன ஸ்டார்ட் அப் தொடங்கினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
கௌரவ் லோந்தே கடந்த 2009ஆம் ஆண்டு பீட்சா டெலிவரி செய்யும் பணியாளராக இருந்தார். தானேயிலிருந்து அந்தேரிக்குத் தினமும் பயணம் செய்த அவர், மும்பையின் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே தினமும் 3 மணி நேரம் வரை செலவிட வேண்டியிருந்தது. இவரை போலவே ஆயிரக்கணக்கான மக்கள் டிராபிக்கில் நீண்ட நேரம் பசியால் வாடுவதை கண்டார்.
ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருந்தபோது, ஒரு நபர் வேர்க்கடலை விற்பதை கண்டார். டிராஃப்பிக்கில் சிக்கி இருந்த பலரும் அதை வாங்கி சாப்பிட்டபோது, அவருக்கு ஒரு பிஸ்னஸ் ஐடியா வந்துள்ளது. ஒரு கைப்பிடி கடலையே நமக்கு மகிழ்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது என்றால், ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு சூடான, புதிய உணவை வழங்கினால் என்ன என தோன்றியதாம்.
இதனை அடுத்து டிராஃபிக் வடா பாவ் (Traffic Vada Pav) என்ற பெயரில் மும்பையின் புகழ்பெற்ற வடா பாவ்களை விற்க தொடங்கினார். 2019-ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு, தனது தாயின் சேமிப்பிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை பெற்று இந்த தொழிலை தொடங்கியுள்ளார். வீட்டிலேயே சுவையான வடா பாவ் தயாரித்து , ஒரு பெட்டியில், ஒரு சிறிய குடிநீர் பாட்டில் மற்றும் டிஷ்யூ பேப்பருடன் வெறும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று படிப்படியாக வளர்ந்த அவர் 2021-ஆம் ஆண்டிற்குள் தினமும் 800 வடா பாக்களை விற்கும் நிலைக்கு உயர்ந்தார். இதன் மூலம் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்கு அவரது தொழில் வளர்ச்சி கண்டது.
கௌரவ் லோந்தேவின் இந்த பயணத்தை பாராட்டியுள்ள ஹர்ஷ் கோயங்கா, போர்டு ரூம்களில் திட்டமிட்டு உருவாக்கும் நிறுவனங்களை விட, அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து தோன்றும் இது போன்ற யோசனைகளே இந்தியாவின் வளர்ச்சி என கூறியுள்ளார்.