தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்
சரியாக தூங்காமல் எழுந்திருப்பவர்கள் அடுத்த நாள் தூங்கிக் கொள்ளலாம் என சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். அரைகுறையாக தூங்கி எழுந்து தங்கள் அன்றாட வேலையை பார்க்கச் செல்பவர்கள் பலர். இதனால் ஏற்படும் பின் விளைவுகளை யாரும் அறிவதில்லை. பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட தூக்கமின்மை என்பதும் பிரதான காரணமாகும்.
தூக்கமின்மையால் சிறு வயதிலேயே கண்களுக்குக் கீழே கருமை, சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தவிர, நல்ல தூக்கம் இல்லாதபோது, கண்களில் எரியும் உணர்வு இருப்பதையும் நீங்கள் அடிக்கடி உணர்ந்திருப்பீர்கள். கண் எரிச்சல் காரணமாக வாகனம் ஓட்டுவது, எழுதுவது, படிப்பது மற்றும் கவனம் செலுத்தும் பணிகளில் சிரமம் ஏற்படும். அதுமட்டுமின்றி சில சமயங்களில் கண்கள் வறட்சி அடையும் பிரச்சனையும் சந்திக்க வைக்கும்.
நீங்கள் நன்றாக தூங்கவில்லை என்றால் உங்கள் நினைவாற்றல் என்பதும் கேள்விக்குறியாகும். சிறிய விஷயங்களை நினைவில் கொள்வதிலும் சிரமம் ஏற்படும். நீங்கள் நன்றாக தூங்கினால் நினைவாற்றல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். தூக்கமின்மையால் ஒருவகை மந்தநிலை ஏற்பட்டு எதிலும் சரியாக செயல்படமுடியாது.
போதிய தூக்கம் இல்லாததால், எந்த விதமான செயலிலும் பங்கு கொள்ள முடியாது. குறைவான உடல் செயல்பாடு காரணமாக, பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. இது வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது.
நீங்கள் நன்றாக தூங்கினால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதோடு, உணவிலும் கவனம் செலுத்துவீர்கள். சரியாக தூங்காமல் எது செய்தாலும் அவை முழுமை அடையாது. உடற்பயிற்சி போன்ற எந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காது.
உங்களுக்கு நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கம் வரவில்லை என்றால், இந்த மனநிலையும் மோசமான விளைவை ஏற்படுத்தும். பல நேரங்களில், தூக்கமின்மையால், அக்கறையின்மை, விரக்தி மற்றும் கோபமும் அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி, ஏற்கனவே ஏதேனும் பிரச்சனையால் ஒருவர் சிரமப்பட்டிருந்தால், அவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம் அல்லது பதட்டம் ஏற்படலாம்.